கைக்கு வந்த முக்கிய பவர்.. தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். ஒரு பக்கம் அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில்.,. இன்னொரு பக்கம் உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை. நேற்று ஆளுநர் மாளிகை இதை பற்றி செய்தி குறிப்பாக வெளியிட்ட நிலையில், இன்று அரசு அறிவிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

மனம் மாறிய உதயநிதி: முன்பு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதில்.. ஸ்டாலினுக்கும் பெரிய ஆர்வம் இல்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தது.
உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ஆட்சி நிர்வாகத்திற்கும், எதிர்காலத்திற்கும் அவசியம் என்பதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்துள்ளார். உதயநிதி ஸ்டாலினும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்: தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இன்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இன்று மாலை செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி முன் பதவியேற்று உள்ளனர்.
முன்னதாக இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேற்று இரவில் ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது.
அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தங்கம் தென்னரசு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
செந்தில் பாலாஜி உட்பட 4 பேருக்கும் எந்த இலாகாக்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சராக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications