ஓயாத 'செங்கல் யுத்தம்': உதயநிதி vs அண்ணாமலை- மதுரை எய்ம்ஸ், மதுரை வேளாண் பல்கலை. முன்வைத்து மோதல்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான "ஒரு செங்கல் யுத்தம்" தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன் சரி.. கட்டிடம் கட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட ஒற்றை செங்கல்லை கையில் எடுத்து பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். சட்டசபை தேர்தலில் உதயநிதியின் ஒற்றை செங்கல் பிரசாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி தரும் வகையில் அவ்வப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மதுரை வேளாண் பல்கலைக் கழகம் எங்கே? என ஒரு செங்கல்லை கையில் எடுத்து பேசுவது வாடிக்கை. இருவரது செங்கல் யுத்தம் இப்போது உக்கிரமடைந்துள்ளது.
அமைச்சர் உதயநிதி விமர்சனம்: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: Madurai AIIMS மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?

எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
எங்குமே இல்லாத வழக்கம்: இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பதில்: கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதும், அதற்கான அவகாசத்தை நீட்டிப்பதும் வழக்கமான நடைமுறைதான். ஜூனியர் அமைச்சரான உதயநிதி விளையாட்டுத்தனமாக இருக்காமல், தன் கட்சியில் உள்ள சீனியர் அமைச்சர்களிடம், அமைச்சரவை நடைமுறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம். ஆனால், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனத்துக்கே, மறுபடியும் ஒப்பந்தம் வழங்கும் திமுகவின் நடைமுறைகள், உலகத்தில் எங்குமே இல்லாத வழக்கம்.

வேளாண் பல்கலைக் கழகம்: திமுக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், 2026 ஆம் ஆண்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை, பிரதமர் மோடி திறந்து வைப்பது உறுதி. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 54 இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பதை, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications