போகஸை திருப்பிய உதயநிதி..அடுத்தடுத்த 4 புராஜக்ட்.. அதன்பின் மொத்தமாக "டாட்டா" காட்ட முடிவா? பின்னணி
சென்னை: தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தற்போது சின்ன பிரேக் எடுத்துவிட்டு படங்களில் நடிக்க உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு அரசியலில் முழு கவனம் செலுத்தும் முடிவில் உதயநிதி இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிரச்சாரத்தின் போது தொகுதிக்கு பெரிதாக செல்லாத உதயநிதி, தேர்தல் வெற்றிக்கு பின் தினமும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று மக்களை சந்தித்தார்.
ஒவ்வொரு ஏரியாவாக சென்று, பலரின் வீட்டுக்கு உள்ளேயே சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்களிடம் மிகவும் சகஜமாக பழகி கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

பிரேக்
இந்த நிலையில் தொடர்ந்து அரசியலில் கடந்த 6 மாதமாக பிசியாக இருந்த உதயநிதி பெரிதாக சினிமா எதிலும் நடிக்கவில்லை. தேர்தலில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது தேர்தல் களேபரங்கள் முடிந்துள்ள நிலையில் உதயநிதி மீண்டும் சினிமாவில் கொஞ்சம் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

மூன்று
அடுத்தடுத்து 4 படங்களை வேகமாக முடிக்கும் முடிவில் உதயநிதி இருப்பதாக கூறப்படுகிறது. கண்ணை நம்பாதே' 'ஆர்டிகிள் 15' ரீமேக், மாரி செல்வராஜ் இயக்கும் படம், மகிழ் திருமேனி இயக்கும் படம் என்று வரிசையாக நான்கு படங்களில் அடுத்த 8 மாதங்களுக்குள் நடிக்கும் முடிவில் உதயநிதி இருக்கிறார். இதில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்றும் கூறப்படுகிறது.

கம்பேக்
இந்த நிலையில் இந்த நான்கு படங்களுக்கு பிறகு மொத்தமாக உதயநிதி அரசியல் பக்கம் வந்துவிடுவார் என்கிறார்கள். இதற்கு பின் பெரிதாக படங்களில் நடிக்க மாட்டார். இந்த 4 படங்களுக்கு பின் மொத்தமாக சினிமா பக்கம் உதயநிதி செல்லாமல், அரசியலில் கவனம் செலுத்துவார் என்கிறார்கள். அதிகபட்சம் இரண்டு வருடத்திற்கு 1 படம் நடிக்கலாம் அல்லது மொத்தமாக அவர் சினிமாவிற்கே முழுக்கு போடும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல்
திமுகவில் தற்போது உயர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி தேர்தல் வெற்றிக்கு பின் அமைச்சர் ஆவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால் விரைவில் உதயநிதிக்கு முக்கியமான பொறுப்பு ஒன்று வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மதிப்பு
சட்டசபை தேர்தலுக்கு பின் உதயநிதி தனது தொகுதியில் மேற்கொண்டது பணிகள் கட்சி தலைமையிடம் அவருக்கு கொஞ்சம் மதிப்பை உயர்த்தியது. இதனால் முக்கியமான மண்டல பொறுப்பு ஒன்று உதயநிதிக்கு வழங்கப்படும் என்கிறார்கள். கட்சியை வலுப்படுத்தும் விதமாக உதயநிதிக்கு சில முக்கிய அசைன்மென்ட் கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.

பதவி
மேற்கு மண்டலம் அல்லது தென் மண்டலத்தில் உதயநிதி வரும் காலங்களில் கவனம் செலுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அடுத்தடுத்த 4 சினிமா புராஜக்ட்களை முடித்துவிட்டு அதன்பின் மொத்தமாக அரசியலில் மட்டுமே உதயநிதி கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications