கெளசல்யாவுக்கு கடவுள் கொடுத்த தண்டனையே ஹைகோர்ட் தீர்ப்பு- தாய் அன்னலட்சுமி
சென்னை: உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் கணவர் சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது; இது மகள் கெளசல்யாவுக்கு கடவுள் கொடுத்த தண்டனைதான் என்று தாய் அன்னலட்சுமி கூறியுள்ளார்.
Recommended Video
ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்தனர் உடுமலை சங்கரும் கெளசல்யாவும். இதற்காக 2016ல் சங்கரையும் கெளசல்யாவையும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கூலிப்படை கும்பல் சரமாரியாக வெட்டியது.

தூக்கு தண்டனை
இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் கெளசல்யா மட்டும் உயிர் பிழைத்தார். இது தொடர்பான வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு
இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேநேரத்தில் அன்னலட்சுமி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. மேலும் சின்னசாமி உள்ளிட்டோர் தங்களது தூக்கு தண்டனைக்கு எதிராவும் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

தூக்கு ரத்து- ஆயுளாக குறைப்பு
இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் முதன்மை குற்றவாளியான சின்னசாமியை விடுதலை செய்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் தண்டனையை ஆயுளாகவும் குறைத்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் நிராகரித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கெளசல்யாவுக்கு கடவுளின் தண்டனை
மேலும், எங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்துவிட்டதாக சிலர் நினைத்தார்கள் (கெளசல்யா). அவர்களுக்கு இப்போது கடவுளே தண்டனையை கொடுத்துவிட்டார் என்பதையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டுகிறது என்றார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வேன் என்று கெளசல்யா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications