மெரினாவில் நம்ப முடியாத மாற்றம்.. சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. இன்று காணும் கோலாகலம்
சென்னை: காணும் பொங்கலான இன்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.. அந்தவகையில் சென்னையில் மட்டும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது காணும் பொங்கல்... இதை முன்னிட்டு, சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மெரினாவில் குவியும் மக்கள்
கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் என்பதால், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அருண் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நகர் முழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினரும் இணைந்து பணியாற்றுகின்றனர். மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை மூன்று தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள ஏழு சேவைச் சாலைகளின் நுழைவுவாயில்களில் காவல் உதவி மையங்கள் செயல்படுகின்றன.
சென்னை மெரினாவில் குளிக்க தடை
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்களும், மீட்புப் பணிகளுக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் மோட்டார் படகுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காணும் பொங்கல் என்பதால் மெரினா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்கும் வகையில் கடற்கரை ஓரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்கும் வகையில், குழந்தைகள் மற்றும் சிறார்களின் கைகளில் சிறப்பு அடையாளப் பட்டைகள் கட்டி விடப்படுகின்றன.
ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 ட்ரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 4 ட்ரோன் கேமராக்கள் என மொத்தம் 8 ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 'ஏஐ' தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, கடலோர பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பைக் ரேஸ் மற்றும் சாகச செயல்களைத் தடுக்கும் வகையில் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெரினா வரும் மக்களுக்கு புதிய பார்க்கிங் ஏற்பாடு
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு வரும் லட்சக்கணக்கான மக்களை சமாளிக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சென்னை மாநகராட்சி புதிய பார்க்கிங் ஏற்பாடுகளை செய்துள்ளது. கடற்கரை ஓரமாக போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால், அண்ணா நினைவிடப் பூங்கா அருகே 10,000 சதுர மீட்டர் பரப்பளவு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்ணா நினைவிடப் பூங்காவிற்குப் பின்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் 50 கார்கள், 50 வேன்கள் மற்றும் 50 சுற்றுலா பேருந்துகளை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மெரினா சேவை சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications