வீடியோ காலில் பதிவான ஆபாசம்.. நள்ளிரவில் நடுங்கி போன பெண்.. 2500 கி.மீ கடந்து பாய்ந்த தனிப்படை
கன்னியாகுமரி: உலகில் இணையதளம் என்பது அறிவை வளர்க்கும் தளமாக இருப்பதை தாண்டி, பல நேரங்களில் இளைய தலைமுறையினரை திசைதிருப்பும் அபாயகரமான வலையாகவும் மாறி வருகிறது.. குறிப்பாக, ஆன்லைன் விளையாட்டுகள் வழியாக அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும் கலாச்சாரம், மாணவ, மாணவிகளின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடுகிறது.. இந்த கன்னியாகுமரி சம்பவத்தை பாருங்கள்!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த 17 வயது பள்ளி மாணவி.. எந்த நேரம் பார்த்தாலும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார்..

கன்னியாகுமரி பள்ளி மாணவி
ஆன்லைனில் மூழ்கி கிடந்த நேரத்தில்தான், அவருக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நாளடைவில் இந்தத் தொடர்பு நெருக்கமாக மாறவே, அந்த மாணவி தனது வீட்டிற்குத் தெரியாமல் அந்த இளைஞருடன் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார்..
இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர், பள்ளி மாணவியிடம் ஆபாசமான பேச்சை மெல்ல துவங்கி உள்ளார்.. நாளடைவில் அந்தே மாணவியை தன் வசப்படுத்தியுள்ளார்.... அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோ உரையாடல்கள் அனைத்தையும் ரகசியமாகப் பதிவு செய்து வைத்துக்கொண்டு, ஒரு கட்டத்தில் மாணவியை மிரட்டத் தொடங்கியுள்ளார்..
வீடியோ கால் ஆபாசம்
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, வேறு வழியின்றி நடந்த உண்மைகளை தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார்..
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து விரிவான புகார் ஒன்றை அளித்தனர்.. புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல் கண்காணிப்பாளர், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்..
அதன் அடிப்படையில், மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. மேலும், தலைமறைவாக இருந்த குற்றவாளியைப் பிடிக்க ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.. விசாரணையில், அந்த மாணவியை மிரட்டிய நபர் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த 21 வயதான அஜய் என்பது உறுதி செய்யப்பட்டது..
தனிப்படை - உத்தர பிரதேசம்
இதனைத் தொடர்ந்து, குமரி மாவட்டத் தனிப்படை போலீசார் உடனடியாக உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு விரைந்தனர்.. அங்கு ஆக்ராவில் பதுங்கியிருந்த அஜயை லாவகமாக சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.. அவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்..
ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் ஒரு பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட இந்தச் சோகம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது போன்ற ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது..
பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் செல்போன் பயன்படுத்தும் சிறுமிகளை குறிவைத்து, அவர்களை ஆபாச வலையில் வீழ்த்தி மிரட்டும் கும்பல்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. இத்தகைய சூழலில், தெரியாத நபர்களிடம் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்களும், வீடியோக்களும் எவ்விதமான விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு குமரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது..!!












Click it and Unblock the Notifications