உத்தர பிரதேசத்தில் இளம் பெண்ணை நேரில் பார்க்க ஓடிவந்த கணவர்.. முகத்தை கண்டதுமே.. மறக்க முடியாத பாடம்
சென்னை: உத்தரபிரதேச மாநிலத்தில், தன்னை வீட்டை விட்டு துரத்திய கணவரை இன்ஸ்டாகிராம் மூலம் ஆசை வலை விரித்து மனைவி பழிவாங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்நேரமும் சோஷியல் மீடியா மோகத்தால் ஒரு நபர் தனது மனைவியிடமே சிக்கி கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அப்படியென்ன நடந்தது உத்தர பிரதேசத்தில்? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே உள்ளது ஜக்புரா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சோனி திரிபாதி. இந்த பெண்ணுக்கும், பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரபுதத் திரிபாதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக அமையவில்லை. திருமணமான சில காலத்திலேயே கணவன்-மனைவி இடையே கடும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் காரணமாக பிரபுதத் தனது மனைவி சோனியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் சோனியை வீட்டை விட்டு அவர் துரத்தியுள்ளார். இதனால் வேறு வழியின்றி சோனி கடந்த 4 ஆண்டுகளாகத் தனது பெற்றோர் வீட்டிலேயே வேதனையுடன் வசித்து வந்தார்.

இன்ஸ்டாகிராமில் விரித்த ஆசை வலை
தன்னைத் துரத்திவிட்டுத் தனியாக வாழ்ந்து வரும் கணவருக்குப் பாடம் புகட்ட சோனி ஒரு பெரிய திட்டம் தீட்டினார். இதற்காக அவர் சோஷியல் மீடியாவில் அதுவும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை ஒன்றை உருவாக்கினார். அதில் ஒரு அழகான பெண்ணின் போட்டோவை பதிவிட்டு, தனது கணவர் பிரபுதத்திற்கு நட்பு அழைப்பு அனுப்பினார்.
திடீரென ஒரு புது அக்கவுண்ட்டில அழகான பெண் போட்டோ இருப்பதை பார்த்ததுமே பிரபுதத் சொக்கிப்போனார்.. உடனே பெண்ணின் அழகில் மயங்கி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் சாட்டிங் மூலம் பேச்சுவார்த்தை தொடங்கியது. நாளுக்கு நாள் இவர்களின் நெருக்கம் அதிகரித்தது.
கோவிலில் அரங்கேறிய கிளைமாக்ஸ்
ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணின் மீது அதீத மோகம் கொண்ட பிரபுதத், அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். இதுதான் கரெக்ட்டான நேரம் என்று கருதிய சோனி, பிரபுதத்தை நேரில் சந்திப்பதற்கு அழைத்தார்.
கடந்த 2-ந் தேதி தாராகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு வரும்படி பிரபுதத்திடம் சோனி சொல்லியிருந்தார். இதனால் றெக்கை கட்டி பறந்தார் பிரபுதத்..
மெல்ல துப்பட்டாவை விலக்கி
தன்னுடைய ஆசை காதலியை முதன்முதலில் பார்க்கப் போகிறோம் என்பதால், பிரபுதத் தனது நண்பருடன் கோவிலுக்கு சென்றார். அங்கு சோனி தனது முகத்தை துப்பட்டாவால் மூடியிருந்தார்.. கூலிங்கிளாஸ் அணிந்து, மறைத்துக் கொண்டு காத்திருந்தார். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க சற்று தொலைவில் சோனியின் தந்தை மற்றும் சகோதரர் மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த பிரபுதத், அருகில் அமர்ந்திருப்பது தனது மனைவி என்று தெரியாமல் மிகவும் ஆசையாகப் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென சோனி தனது முகத்திரையை மெல்ல விலக்கினார். எதிரே தனது மனைவி நிற்பதை கண்ட பிரபுதத் நிலைகுலைந்து போனார். அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவர், சிறிது நேரத்தில் ஆத்திரமடைந்து சோனியை தாக்கி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
ஜெயிலில் பிரபுதத்
பிரபுதத் வன்முறையில் இறங்கியதைக் கண்டதும், மறைந்திருந்த சோனியின் உறவினர்கள் ஓடிவந்து அவரை மடக்கிப் பிடித்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபுதத்தை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த மனைவியைத் தேடாத கணவன், இன்ஸ்டாகிராம் பெண்ணின் அழகில் மயங்கிச் சிக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications