Budget 2026: வளர்ச்சி அடைந்த இந்தியா.. தன்னிறைவு பெற்ற இந்தியா! தைப்பூச நன்னாளில் சூளுரைத்த நிர்மலா சீதாராமன்!
சென்னை: 2026-27 ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம் எனவும், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும் இதற்கான தைரியமான நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு எடுக்கும் என தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை வகுக்கும் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அவர் பட்ஜெட்டை சமர்ப்பிப்பது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
இதன் மூலம் இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் ஒருவராக அவர் இடம் பிடித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2026-27
வழக்கமாக வார நாட்களில் மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த மாற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. 2026-27 பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு, மூலதனச் செலவுகள், மின்சாரத் துறை மற்றும் மலிவு விலை வீடுகள் ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பட்ஜெட்டுக்கு முன்பே பொருளாதார வல்லுநர்கள் கணித்து வந்தனர். குறிப்பாக நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை
இந்நிலையில் தனது பட்ஜெட் உரையின் போது பேசிய நிர்மலா சீதாராமன்," புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் இந்த பட்ஜெட்டை நான் தாக்கல் செய்கிறேன். தடைகளைத் தாண்டி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருந்தார். அதன் பலனாக கடந்த காலங்களில் நாட்டின் வளர்ச்சிக்காகவும் நிதி மேம்பாட்டிற்காகவும் தொடர்ச்சியாக உழைத்து வந்தோம். குறிப்பாக தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். பண வீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது.
வளர்ச்சி அடைந்த இந்தியா
புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தி துறையை பல மடங்கு அதிகரித்துள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும் இதற்கான தைரியமான நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு எடுக்கும். இந்த தருணத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்திய நாட்டு மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக செயல்படுவோம். இளைஞர்கள் சக்தி முன்னிறுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
பயோ பார்மா சக்தி திட்டம்
மருந்து தயாரிப்பு துறைக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, இதன் மூலமாக பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும். ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் உருவாக்கப்படும். அரியவகை காந்தங்கள் உற்பத்திக்கென வழித்தட திட்டம் கொண்டு வரப்படும். 3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications