Tamil nadu: ஆதிச்சநல்லூர் டூ பழவேற்காடு ஏரி வரை! தமிழகத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகத்திற்கு சில திட்டங்களை அறிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்ப்போம். மேலும் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2026- 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் போது அவர் அணிந்திருக்கும் சேலை தனித்துவமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அவர் அணிந்திருந்தார்.

காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் 3 முக்கிய காரியங்களை மையமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
அவை நிலையான வளர்ச்சி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது, எல்லோருக்கும் எல்லாம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரூ40 ஆயிரம் கோடியில் செமிகண்டக்டர் உள்பட மின்னணுவியல் வளர்ச்சிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் உரை படிக்க தொடங்கியது முதல் இதுவரை தமிழகத்திற்கு அவர் அறிவித்த திட்டங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், ஒடிசாவில் மினரல் காரிடார் அமைக்கப்படும். அதாவது கனிமவள மையம் அமைக்கப்படும். அரியவகை கனிமங்களை எடுக்க இந்த மையம் அமைக்கப்படும்.
- அது போல் 7 அதிவேக ரயில் திட்டங்களையும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும். ஹைதராபாத்- சென்னை, சென்னை- பெங்களூர் இடையே அதிவேக ரயில் தடங்கள் உருவாக்கப்படும்.
- தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.
- பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆந்திரா-தமிழக எல்லையில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்.
- 2000 தொழில் குழுமங்களை புத்துயிர் பெறச் செய்யவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சிக்காகவும் பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு. தமிழகத்திலும் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளதால் இந்த அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தும்.
- தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது போல் மேற்கு வங்கத்திற்கு இந்த அதிவேக ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த அறிவிப்புகள் சட்டசபை தேர்தலை முன்வைத்து அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications