வரும் 10 ஆம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா? புதிய தலைவர் நியமனம் குறித்து ஆலோசனையா.. பரபர தகவல்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 10 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பயணத்தின் போது தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் யார் என்பது பற்றிய அறிவிப்பும், 2026 சட்டசபை தேர்தலில் பாஜக மேற்கொள்ள இருக்கும் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி உள்ள நிலையில், அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் தென்பட்டுள்ளன.

கடந்த வாரம் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய அமித்ஷா, தமிழகத்தில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறி கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக சூசகமாக தெரிவித்தார். அமித்ஷாவுடனான சந்திப்பின் போது, அண்ணாமலையை பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் வலியுறுத்தியாக சொல்லப்படுகிறது.
பாஜக தலைமையும் இதை ஏற்றுக்கொண்டு இதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையும் சமீபத்திய பேட்டிகளில், தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட இருப்பதை கிட்டதட்ட உறுதியாக சொல்லிவிட்டார் என நினைக்கும் அளவுக்கு சொல்லிவிட்டார். பாஜகவின் அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றே வெளிப்படையாக அண்ணாமலை சொல்லியிருப்பதன் மூலம் அவர் மாற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் வரும் 9 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 10 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வரும் 10 ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, மறுநாள் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்பதை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளையும் பாஜக தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதற்கான வியூகங்கள் என்னென்ன என்பது தொடர்பாகவும் தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அமித்ஷாவை கடந்த மாத இறுதியில் அண்ணாமலை டெல்லி சென்று சந்தித்து பேசினார். இதனை தொடந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இதற்கு பிறகு தான் தமிழக பாஜக தலைவரை மாற்றம் செய்வது குறித்து அவர் முடிவெடுத்ததாகவும், அதற்கான ஆலோசனையில் அவர் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. மேலும் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, அவருக்கு பதிலாக புதிய தலைவரை நியமனம் செய்யும் வகையில் வரும் 11 அல்லது 12 ஆம் தேதி சென்னையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தின்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் தமிழகம் வர தொடங்கியுள்ளனர். மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள். நாளை பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக ராமநவமி நாளான நாளை, ராமேஸ்வரம் கோவில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த திறப்பு விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் வருகை தருகிறார். தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் இதனை உறுதியாக அறிவிக்கும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதாக வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications