திருமாவளவனுக்கு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த மத்திய அமைச்சர்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி பொற்கொடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. அதைத்தொடர்ந்து, திருமாவளவன் உள்ளிட்ட தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி பொற்கொடியைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராம்தாஸ் அத்வாலே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை, எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "கடந்த பல ஆண்டுகளாக தலித் மக்களுக்காக ஆம்ஸ்ட்ராங் உழைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஒரு வலிமையான தலித் தலைவர். ஆனால், சிலர் அவரை கொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், இவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்களையும் கண்டறிய வேண்டும்.
காவல் ஆணையரை மட்டும் மாற்றினால் போதாது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் சரணடைந்தவர்களுக்கு பின்னால் அரசியல் தொடர்பு இருக்கிறது என்று அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் எதிர்பார்க்கின்றனர். எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மாநில காவல்துறையின் விசாரணை முழுமையானதாக இல்லை. கொலை செய்யப்பட்டவர் ஒரு வலிமையான தலித் தலைவர். ஆனால், கொலை செய்ய திட்டமிட்டவர்கள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை, எனவே தான் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் உள்ள தலித் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தில் பாஜகவிற்கு சம்பந்தம் உள்ளது எனும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரே பதில் தான். தமிழ்நாட்டில் பாஜக எந்த விதமான குற்றம் செய்யும் கட்சிகளுடனும் கூட்டணியில் இல்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான எனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து அளிப்பேன்.
திருமாவளவன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை சம்பவம் அதிகரிப்பதால் தலைவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். தமிழ்நாட்டில் கலப்பு திருமணம் செய்பவர்களின் மரணம் அதிகம் நிகழ்கிறது. தலித் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications