துணைவேந்தர் நியமனம்.. ஆளுநர் அமைத்த குழுவை அதிரடியாக மாற்றிய தமிழ்நாடு அரசு.. உச்ச மெடுத்த மோதல்
சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
துணைவேந்தர் தேர்வுக்கு ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் பல்வேறு விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. தொடக்கத்தில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொள்ளாதது இரண்டு தரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
முக்கியமாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் ரவி - தமிழ்நாடு அரசு இடையே மோதல் நிலவி வருகிறது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் இதை ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த மசோதாவை இன்னும் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. சமீபத்தில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு ஆளுநர் மாளிகையில் நடப்பதும், அதை ஆளுநர் தொடங்கி வைத்ததும் திமுக தரப்பில் புகைச்சலை ஏற்படுத்தியது.
இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அழைக்கப்படாததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீண்டும் சர்ச்சை: அதன்படி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு நேற்று ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்காக துணைவேந்தர் பணியிடங்களுக்கு மூவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. துணைவேந்தர் தேர்வுக்கு ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications