மூடப்பட்ட இடம்.. ஏசியும் போட்டு விடுவாங்க.. இருமினாலே போச்சு.. இன்னும் என்ன விபரீதங்கள் ஏற்படுமோ?
சென்னை: கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியா இன்னும் அதன் உச்சகட்ட பரவலை அடையவில்லை என்றும், குளிர்காலத்தில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் பல எச்சரிக்கை ஆய்வுகள் முடிவுகள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் திரையரங்குகளை திறப்பதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது மத்திய அரசு.
அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இயங்கி கொள்ளலாம் என்றும், 50% இருக்கைகளில் ரசிகர்கள் அமர அனுமதிக்க வேண்டும் என்றும் அன்லாக் 5.0 என்ற பெயரில் மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிசையில் சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்த 3 கயவர்கள்
யாருக்கு மகிழ்ச்சி
இந்த உத்தரவால் தியேட்டர் உரிமையாளர்களும், தியேட்டர்களில் பார்க்கிங் குத்தகை எடுத்திருப்போருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி கிடைக்குமே தவிர மற்றபடி பெரிதாக யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. அதற்கு மாறாக பல மடங்கு தீமைகள் தான் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவத் துறை வல்லுனர்கள்.
இந்திய கொரோனா புள்ளி விவரம்
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 86 ஆயிரத்து 821 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,181 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் கொரோனாவல் பாதிக்கக்கூடிய ஒரு நாட்டில் திரையரங்குகளையும், மல்டிபிளக்ஸ்களையும் திறந்து விடுவது என்பது எத்தகைய முடிவு என்பது அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருக்கிறது.
யார் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது?
திரைத்துறையை நம்பி பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றெல்லாம் காரணம் கூறப்பட்டது. ஆனால் இதற்கு வடிகாலாக ஓடிடி பிளாட்பாரங்கள் வந்துவிட்டன. பல கோடிகளை முதலீடு செய்து படங்களை வாங்கி இணையதளங்களில், ஓடிடி நிறுவனங்கள் வெளியிடுகின்றன. எனவே நடிகர்-நடிகைகள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இழப்பு ஏற்பட போவது கிடையாது. சொற்பமான எண்ணிக்கையில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமே லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பாதிக்கப்படக் கூடாதுதான். ஆனால் என்ன செய்வது? இதற்காக தியேட்டர்களை திறந்து விடுவதன் மூலம் எத்தனை லட்சம் மக்களுக்குஒரு நோய் தொற்று பரவும்? அதை ஒப்பிட்டால், தியேட்டர் உரிமையாளர்களின் பாதிப்பு சிறிதாக தெரியுமே.
ஒரு சீட் விட்டு ஒரு சீட்
மற்ற இடங்களைப் போல அல்லாமல், தியேட்டர் என்பது அனைத்து பக்கமும் மூடப்பட்டு இருக்கக்கூடிய ஒரு பகுதி. அதிலும் குளிர் சாதன வசதி பொருத்தப்பட்ட இடம். ஹோட்டல்களில் கூட ஏசி இல்லாமல் சாப்பிடலாம். தியேட்டரில் ஏசி இல்லாமல் படம் பார்க்க முடியுமா? 50 விழுக்காடு ரசிகர்களுக்கு அனுமதி என்றால் ஒரு சீட் விட்டு இன்னொரு சீட் ரசிகர்கள் அமர அனுமதிக்கப்படுவார்கள் என்று அர்த்தம். இந்த சிறிய இடைவெளிக்குள் அத்தனை நூறு பேர்கள் ஒரு மூடப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து ஏசி காற்றை சுவாசிக்கும் போது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவ துறை வல்லுநர்கள்.
எப்படி பரவும்
ஒரு நபர் இருமும்போது 3000 எச்சில் துளிகள் வாயிலிருந்து வெளியே கிளம்புகின்றன. ஒருவர் தும்மும்போது 30,000 எச்சில் துளிகள் காற்றில் கலக்கின்றன. ஏசி தொழில்நுட்பத்தை பொருத்தளவில் அந்த அறையில் உள்ள வெப்பத்தை முழுமையாக குறைத்துவிடும். மேலும் அங்கே ஏற்கனவே இருக்கக்கூடிய காற்றைத்தான் மறுபடி, மறுபடி சூழ்ச்சி செய்து உள்ளே அனுப்பும். எனவே ஒரு தியேட்டருக்கு கொரோனா நோயாளி ஒருவர் வந்து திரைப்படத்தை பார்த்தால், இந்த ஏசி காற்று மூலமாக அங்கே இருக்கக்கூடிய அனைவருக்கும் அது பரவும் வாய்ப்பு இருக்கிறது.
மக்களே உஷார்
அப்படி நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் அவர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது அவர்கள் வீட்டிலுள்ளோர், குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும் நோய் பரவல் ஏற்படும். வீட்டில் முதியவர்கள் இருந்தால் நிலைமை படுமோசமாகும். இப்படி எல்லாம் கடுமையான அச்ச சூழ்நிலை இருக்கக்கூடிய இடம்தான் திரையரங்கு. இதையெல்லாம் மருத்துவ வல்லுநர்கள் எடுத்துக் கூறியதால், அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழக அரசு புரிந்து கொண்டு திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசோ நாட்டில் இத்தனை வேகமாக தீ போல கொரோனா பரவி வரும் நிலையிலும் திரையரங்குகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளது. அனுமதி கொடுப்பது வேண்டுமானால் அவர்கள் விருப்பமாக இருக்கட்டும். உங்கள் உடல்நலமும், உங்கள் குடும்பத்தார் உடல் நலமும் உங்கள் கையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதுதான் மக்களுக்கு நல்லது.