வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது
சென்னை: சென்னையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை என்றால் அது வடபழனியில் இருந்து பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயில் சேவை தான். இந்த ரயில் சேவை நிறைவேற்றப்பட்டால், சென்னையின் மேற்கு பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். பூந்தமல்லி முதல் வடபழனி வரை உள்ள மக்கள் சென்னையின் எந்த பகுதியயும் எளிதில் ரயில் மூலம் அடைய முடீயும். அங்குள்ள 11 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மெட்ரோ ரயில் சேவைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையில் மாதத்திற்கு சுமார் ஒரு கோடி அளவிற்கு பயணிகள் பயணிக்கிறார்கள். இதனால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2-வது கட்டமாக 118.9 கி.மீ. நீளத்துக்கு 3 வழித்தடங்களில் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை விறுவிறுப்பாக அமைத்து வருகிறது. இதில் 3-வது வழித்தடமான, பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ. தூரத்துக்கு மஞ்சள் நிற வழித்தடத்துக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் மேற்கு பகுதி சென்னை முழுமையாக இணைகிறது. இதில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரை உயர்மட்டப்பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதே நேரம் போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி வரை உள்ள ரயில் நிலைய பணிகள் நிறைவடையவில்லை.

இதனால் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் வரை உள்ள 10 ரயில் நிலையங்களிலும் ரயில் சேவையை தொடங்க முடியும். ஆனால் போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி இடையே உள்ள ரயில் நிலைய பணிகள் நிறைவடையாததால் போரூரில் இருந்து புறப்படும் ரயில் 11-வது ரயில் நிலையமான வடபழனியில்தான் நிற்கும். மொத்தத்தில் 15.8 கி.மீ. தூரத்துக்கு பயணிகள் போக்குவரத்தை தொடங்குவதற்கு 'பாதுகாப்பு சான்றிதழ்', ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி வழங்கி உள்ளார். எனினும் பணிகளை முடித்து திறக்கவே மெட்ரோ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்..
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் 4-வது வழித்தடமான பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து 1-வது வழித்தடமான வடபழனி இடையே ஓரிரு நாட்களில் ரயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த பிரிவில் பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் ஜங்ஷன், வடபழனி உள்ளிட்ட 11 நிலையங்கள் பயணிகளுக்கு தேவையான நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. இதில் ஆளில்லாத 10 மெட்ரோ ரயில் முதலில் இயக்கப்பட உள்ளது என்று கூறினார்கள்.
அதேநேரம் இந்த மெட்ரோ ரயில் போரூருக்கு அடுத்து வடபழனியில் தான் நிற்கும். போரூர் சந்திப்பில் இருந்து வடபழனி இடையே உள்ள ஆலப்பாக்கம், கருப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் ஆகிய 5 ரயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து, தற்போது பயணிகளுக்கான அடிப்படை உள்ளிட்ட சிவில் வேலைகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து படிப்படியாக ஒவ்வொரு ரயில் நிலையமும் திறக்கப்படும். குறிப்பாக, வருகிற ஜூன் மாதத்துக்குள் போரூரில் இருந்து வடபழனி வரை உள்ள அனைத்து பணிகளும் முழுமை பெறும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த சேவை தொடங்கினால் மேற்கு சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லியில் இருந்து வரும் பயணிகள் வடபழனியில் இருந்து எளிதாக மற்ற பகுதிகளுக்கும் செல்ல முடியும். அதேநேரம், சென்னையின் மேற்குப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூந்தமல்லி மக்கள் இனி எளிதாக வேளச்சேரிக்கு ரயிலேயே வந்துவிட முடியும். வேளச்சேரி, மயிலாப்பூர் மக்களுமே இனி எளிதாக ஒரே ரயிலில் ஏறி பரங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் பூந்தமல்லி போய்விட முடியும்.












Click it and Unblock the Notifications