திமுக இளைஞர் அணிக்கு உதயநிதி போல.. துரை வையாபுரியை நாம நியமிக்கலாமே.. மதிமுகவில் ஓங்கும் குரல்!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டது போல மதிமுக இளைஞரணி செயலாளராக வைகோ மகன் துரை வையாபுரியை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாம். மேலும் இளைஞரணிக்கு தனி அலுவலகம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாம்.
1990களில் திமுகவின் மூத்த தலைவராக கோலோச்சியவர் வைகோ. அப்போது மகன் மு.க.ஸ்டாலினையே கட்சியின் அடுத்த தலைவராக்க மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தீவிரம்காட்டினார்.

வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு
இதனால் கருணாநிதி-வைகோ இடையே மோதல் ஏற்பட்டது. மதிமுக என்கிற தனிக்கட்சியை வைகோ தொடங்கினார். வாரிசு அரசியலுக்கு எதிராக கட்சி தொடங்கிய வைகோ இதுவரை மகன் துரைவையாபுரியை அரசியலுக்குள் கொண்டுவராமலேயே இருந்து வருகிறார்.

வைகோ மகன் துரைவையாபுரி
ஆனால் அண்மைக்காலமாக மதிமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் துரை வையாபுரி பங்கேற்று வருகிறார். மதிமுக நிர்வாகிகளும் துரை வையாபுரிக்கே வைகோ அளவுக்கு முக்கியத்துவம் தந்தும் வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அண்மையில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

மதிமுக இளைஞரணி
இந்த கூட்டத்தில் பேசிய மதிமுக மூத்த தலைவர்கள் பலரும், துரைவையாபுரியை மதிமுக இளைஞரணி செயலாளராக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் என் மகன் துரை வையாபுரி, இந்த தாயகம் பக்கமே வரமாட்டார் என்பதுதான் என் நிலைப்பாடு என வைகோ கூறியிருக்கிறார்.

அன்பகம் போல தனி அலுவலகம்
இதனை சுட்டிக்காட்டிப் பேசிய சில மதிமுக நிர்வாகிகள், தாயகத்துக்கு துரை வையாபுரி வரவேண்டாம். மதிமுக இளைஞரணிக்கு துரை வையாபுரியை செயலாளராக நியமித்து அவருக்கு தனியே ஒரு அலுவலகம் அமைத்து கொடுக்கலாம் எனவும் பேசினராம். அதாவது திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டு அன்பகம் அலுவலகம் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது போல துரை வையாபுரிக்கும் செய்யலாம் என்பது மதிமுக மூத்த தலைவர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications