ராஜ்யசபாவுக்குள் நுழையும் வைகோ.. 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே'... அலறப் போகும் சு.சுவாமி
சென்னை: ராஜ்யசபாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நுழைவதால் மிகவும் அதிர்ந்து போகப்போகிறவர் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. ஏனெனில் சுப்பிரமணியன் சுவாமியை ராஜ்யசபாவில் 'அப்படி' ஒரு மிரட்டல் விடுத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் வைகோ.
ராஜ்யசபாவில் நீண்டகாலம் கோலோச்சியவர் வைகோ. 1980களின் தொடக்கத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை அனல் கக்க ராஜ்யசபாவில் பேசியவர் வைகோ. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது மிஸ்டர் ராஜீவ் காந்தி என பெயரை சொல்லி வாதிட்டவர்.
அதேபோல் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியுடன் வைகோ நடத்திய மல்லுக்கட்டு நாடாளுமன்ற சரித்திரத்தில் என்றும் பேசும். இலங்கையில் ரஞ்சன் விஜயரத்னே படுகொலை செய்யப்ப்ட்ட காலம்.
அப்போது நாடாளுமன்ற லாபியில் சுப்பிரமணியன் சுவாமிக்கும் வைகோவுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது வைகோ, வி வில் கில் யூ என சுப்பிரமணியன் சுவாமியை மிரட்டியிருக்கிறார்.
உடனே சுப்பிரமணியன் சுவாமி ராஜ்யசபாவுக்குள் ஓடிப் போய் சபாநாயகரிடம் வைகோ என்னை கொல்ல சதி செய்கிறார். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என அலறியபடி கூறினார். இது தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது.
வைகோவோ, நான் சுப்பிரமணியன் சுவாமியை பார்த்து அப்படி சொன்னேன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? ஆதாரத்தை காட்ட தைரியம் இருக்கிறதா? என சுப்பிரமணியன் சுவாமியை நோக்கி கேட்டார். சுப்பிரமணியன் சுவாமி விழிபிதுங்கிப் போனார்.
வைகோவே பல பொதுமேடைகளில் இத்தகவலை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்போதும் ராஜ்யசபாவில் சுப்பிரமணியன் சுவாமி எம்.பியாக இருக்கிறார். அதே ராஜ்யசபாவுக்குள் மீண்டும் வைகோ செல்ல இருக்கிறார்.
வரலாறுகள் உதயமாகுமோ? திரும்புமோ?