ராஜ்யசபா தேர்தல்- வைகோ, வில்சன், சண்முகம் நாளை வேட்புமனுத் தாக்கல்!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் நாளை காலை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. திமுகவுக்கான 3 இடங்களில் மதிமுகவுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, ராஜய்சபா வேட்பாளர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தொழிற்சங்கமான தொமுசவின் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரை திமுக வேட்பாளர்களாக அறிவித்தது. இந்த நிலையில் தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இருப்பினும் அவரது சிறை தண்டனை 1 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வைகோ ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் வைகோவின் வழக்கு வராது என்பதால் அவர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து திமுகவின் வேட்பாளர்களுடன் வைகோ நாளை காலை தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.












Click it and Unblock the Notifications