உலக கோடீஸ்வரரின் பாச்சா பலிக்கவில்லை! அனில் அகர்வால் முயற்சிகளை தூள் தூளாக்கிய வைகோ! மகன் பெருமிதம்!
சென்னை: உலக கோடீஸ்வரரான அனில் அகர்வாலையே தனது சட்டப் போராட்டங்களால் மலைக்க வைத்தவர் வைகோ என அவரது மகன் துரை வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை வைகோ தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை காக்கும் எல்லைச் சாமியாக திகழ்கிறார் என மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக துரை வைகோ பேசிய விவரம் வருமாறு;

''தூத்துக்குடியில் உலக கோடீஸ்வரன் அனில் அகர்வாலின் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை தனது சட்டப் போராட்டங்களால் தடுத்து நிறுத்தியவர் நம் தலைவர் வைகோ. தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் தென் மாவட்டங்களுக்கு பேராபத்தை விளைவிக்க கூடிய நியூட்ரினோ திட்டத்தை வழக்காடி தடுத்து நிறுத்தியவர் நம் தலைவர்.''
''தஞ்சை வேளாண் மண்டலத்தை நாசப்படுத்தக் கூடிய மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் ஆகிய நச்சுத் திட்டங்களை போராடி தடுத்து மாமனிதர் வைகோ. நாம் இருக்கும் வீடு பிடிக்கவில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம். நாம் வசிக்கும் ஊர் பிடிக்கவில்லை என்றால் வேறு ஊருக்கு சென்று விடலாம். அதே போல் நாடு பிடிக்கவில்லை என்றால் கூட வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்து விடலாம். ஆனால், நாம் இருக்கும் பூமியில் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை இழந்தால், நாம் வேறு பூமிக்கு செல்ல முடியுமா? முடியாது.''
''ஆகையால் நமக்கு இருக்கும் ஒரே பூமித்தாயை பாதுகாக்கும் பெரும் கடமையும், பொறுப்புணர்வும் நமக்கு இருக்கிறது. ஆகையால், மரக் கன்றுகள் நடுவோம். நீர் நிலைகளை பாதுகாப்போம். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடுவோம். நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளும் சாக்கடையும் கலக்காமல் பாதுகாப்போம். மண்ணையும், காற்றையும், நீரையும் மாசுபடுத்தும் நெகிழிகளை (Plastics) முடிந்தவரை தவிர்ப்போம். துணிப் பைகளை பயன்படுத்துவோம்.''
'' இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி செயற்கை இரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லி மருந்துகளையும் தவிர்ப்போம். இதுபோன்ற நடவடிக்கைகளில் நாம் அனைவரும் ஈடுபட்டு நம் பூமித்தாயை காப்போம். சுற்றுச்சூழலை காக்க நம் பூமித் தாயை காக்க அதற்குரிய ஒரு விழிப்புணர்வை உருவாக்க நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த யானைமலை மாரத்தான் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகளும், நன்றிகளும்!''












Click it and Unblock the Notifications