“நட்டாற்றில் விட்டுட்டாரு”.. வைத்திலிங்கம் செயலால் கொதித்துப்போன ஆதரவாளர்கள்.. அதிமுகவில் ஐக்கியம்!
சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திடீரென திமுகவில் இணைந்ததால், கடுமையாக அப்செட் ஆன அவரது ஆதரவாளர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளனர். வைத்திலிங்கம் தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், திமுகவில் இணைந்து தங்களை நட்டாற்றில் விட்டுவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

பின்னர், அதிமுகவில் இருந்து விலகி அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதாகவும் எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்றும், திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது. அதிமுக சர்வாதிகாரமாகச் செயல்பட்டு வருகிறது" என்றும் தெரிவித்தார்.
மேலும், இதுதான் தாய்க் கழகம். இன்னும் பலர் வருகிறார்கள். 26 ஆம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு விழா நடக்க உள்ளது எனத் தெரிவித்தார். தஞ்சாவூர், செங்கிப்பட்டி பகுதியில் வரும் 26 ஆம் தேதி திமுக மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இந்த நிகழ்வுக்கு வரும்போது தன் ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேரை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்க திட்டமிட்டுள்ளார் வைத்திலிங்கம்.
இந்நிலையில், வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சாமிநாதன், சண்முகபிரபு, ராஜா, செல்லதுரை உள்ளிட்ட சுமார் 50 நிர்வாகிகள் திமுகவுக்கு செல்ல விருப்பம் இல்லாமல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் அவர்கள் சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
வைத்திலிங்கம் மீது அதிருப்தியில் அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் கூறுகையில், "ஜெயலலிதா தான் எங்களுக்கு குல தெய்வம். அவருடைய வாழ்நாள் எதிரி திமுக. அப்படிப்பட்ட திமுகவில் வைத்திலிங்கம் இணைந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிகாரம் வரும் போகும். தன் சுயநலத்திற்காக, தன்னை காப்பாற்றி கொள்ள இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் வைத்திலிங்கம்.
அதிமுகவில் இணைய வேண்டும், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவருடன் இருந்தோம். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. எங்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், திமுகவில் இணைந்து தங்களை நட்டாற்றில் விட்டுவிட்டார். எனவே தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் சரவணன் தலைமையில் அதிமுகவில் இணைந்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
திமுகவில் இணைந்த வைத்திலிங்கம், வரும் சட்டசபை தேர்தலில் தனது மகன் பிரபுவை ஒரத்தநாடு தொகுதியில் நிற்க வைக்க திட்டமிட்டு, தனது ஆதரவாளர்களை திரட்டி ஸ்டாலினுக்கு தனது செல்வாக்கை நிரூபிக்க முயன்று வரும் சூழலில், அவரது ஆதரவாளர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications