"டயர்டாகிப்போன" ஓபிஎஸ் தரப்பு? பொதுக்குழுவிற்கு தடைகேட்டு இப்போது தேர்தல் ஆணையம் போக மாட்டார்களாம்!
சென்னை: அதிமுக பொதுக் குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு இப்போது செல்ல மாட்டோம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை மீறி நாளை அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ்ஸுக்கு நீதித்துறை, காவல் துறை என அனைத்தும் கைவிட்ட நிலையில் நிராயுதபாணியாக தடுமாறி வருகிறார்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் தொண்டர்களும் நிர்வாகிகளும் குவிந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில் ஓபிஎஸ் வீட்டில் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த கட்ட நகர்வுகள்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து உற்று நோக்கப்படுகிறது. இதுகுறித்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடர்பாக இப்போதைக்கு தேர்தல் ஆணையம் செல்ல மாட்டோம்.

ஒற்றைத் தலைமை
மேலும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு போக வேண்டிய நேரத்தில் கட்டாயம் போவோம். அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை பொருத்தே தேர்தல் ஆணையத்திற்கு செல்வது குறித்து முடிவு செய்வோம் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

9 நாட்கள்
கடந்த 9 நாட்களாக ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தன. அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என ஆவடி போலீஸில் ஓபிஎஸ் மனு கொடுத்திருந்தார். பொதுவாக உள் அரங்கில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு போலீஸால் தடை விதிக்க முடியாது.

பொதுக் குழு கூட்டம்
ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் இதை அறியாமல் எப்படி போலீஸுக்கு மனு அளித்தார் என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அதிமுகவில் இரு அணிகளுக்கிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் நாளை பொதுக் குழு கூட்டம் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications