அப்படி போடு! சென்னையில் சீறிப்பாய இருக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர்..பயணிகளிடையே எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பெங்களூரில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், இந்த மாத இறுதியில் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதனால், வந்தே பாரத் ரயிலை தமிழகத்தில் இயக்க திட்டமா? என எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில்களில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ரயில்வே மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ரயில்: இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை - நெல்லை, சென்னை- கோவை, மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில், சென்னை - பெங்களூர், கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள் என பல வசதிகள் உள்ளன.
படுக்கை வசதி: தற்போது வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் சேர் கார், எக்சிகியூடிவ் சேர் கார் என அமரும் வகையிலான இருக்கைகள் மட்டுமே உள்ளன. எனவே, தொலைதூரங்களுக்கு செல்லும் வகையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்தனர். இதையடுத்து, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டது.
அதி நவீன வசதி: அதன்படி, பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தில், முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த ஆண்டு துவங்கியது. அதி நவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகள், தானியங்கி கதவுகள் என ஹெடெக் வசதியுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாத துவக்கத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த ஆண்டு இறுதிக்குள் சேவை தொடங்கப்படும் எனக் கூறியிருந்தார்.
சோதனை ஓட்டம்: தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், இந்த மாதம் இறுதியில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்பிற்கு கொண்டு வரப்படுகிறது. ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற் சாலையில் உள்ள ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாம். அதன்பிறகு ரயிலின் இயக்கம், ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் அறிக்கை ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் இயக்கப்படுகிறதா?: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்த ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எந்த வழித்தடத்தில் முதலில் இயக்கப்படும் என தெரியவில்லை. எனினும், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் இந்த ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications