ஜொலி ஜொலிக்கும் வந்தே பாரத்.. விஜய் வசந்த் நச்சுனு போட்ட நங்கூரம்.. தென்மாவட்டத்துக்கே வரப்பிரசாதம்
சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை, தென்மாவட்ட மக்களுக்கு விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து முக்கிய கோரிக்கை ஒன்றும் வலுத்து வருகிறது.
வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. இந்த வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்கிறார்கள்.. அதனால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் துவக்கி வைத்து வருகிறார்.

வந்தே பாரத்: நம்முடைய தமிழ்நாட்டில்கூட, 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. சென்னை - மைசூரு & சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தென்மாவட்ட மக்கள்: இப்போது, சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தப்போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து, அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் இந்த ரயிலை அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
சாதாரண் வந்தே பாரத்: இதுபோக, ஆரஞ்சு நிற வந்தேபாரத் நெல்லை-சென்னை ரூட்டில்தான் இயங்கும் என்கிறார்கள். இதுபோக, குறைந்த கட்டணத்தில் 'சாதாரண் வந்தே பாரத்' வரப்போவதாக சொல்கிறார்கள். இதில், பெரிதும் எதிர்நோக்கி இருப்பது தென்மாவட்டத்துக்கு வரப்போகும் வந்தே பாரத் ரயில்தான்.
இந்த வந்தே பாரத் ரயில் சேவையை நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை என இயக்கினால் கூடுதல் பலனாக இருக்கும் என்பதே ரயில் பயணிகள் சங்கங்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.. கடந்த 2019-ம் ஆண்டு எம்பி தேர்தலுக்கு பிறகு ஒரு ரயில் கூட குமரி மாவட்டத்துக்கு, திருநெல்வேலி, மதுரை வழியாக பயணம் செய்யும் விதத்தில் இதுவரை அறிவிக்கப்பட வில்லையாம்.. இதை பயணிகள் சங்கத்தினர் வருத்தமாக கூறியிருந்தார்கள்..
இரட்டைப்பாதை: அதுமட்டுமல்ல, திருநெல்வேலி முதல் மேலப்பாளையம் வரையிலும், ஆரல்வாய்மொழி முதல் கன்னியாகுமரி வரை உள்ள இடங்களில் இரட்டைபாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்த பணிகள் முடிவு பெற்ற பிறகு குமரிக்கு வந்தே பாரத் ரயில்கள் வந்தால் நல்லா இருக்கும் என்கிறார்கள்..
கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த்தும் தொடர்ந்து இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.. சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிப்பதுடன் தென் தமிழகத்தின் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெறலாம் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்.
இப்போது மீண்டும் இதே கோரிக்கையை வைத்துள்ளார் விஜய் வசந்த்.. புதியதாக நியமனம் செய்யப்பட்ட தென்னக ரெயில்வேயின் முதன்மை இயக்க மேலாளர் திரு. என். ஸ்ரீகுமார் அவர்களை, இன்று சென்னையில் சந்தித்த விஜய்வசந்த் எம்பி, கடிதம் மூலமாக இந்த கோரிக்கை வைத்துள்ளார்.

விஜய்வசந்த்: அந்த கடிதத்தில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு பயணம் செய்வதற்கு போதுமான ரெயில் வசதிகள் இல்லை. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு மாணவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காகவும் மற்றும் ஏராளமானோர் சென்னைக்கு செல்கின்றனர்.
நாகர்கோவில் சென்னை இடையே மிக அதிகமாக பயணிகள் ரெயில் மூலமாக பயணம் செய்து வருவதால் அவர்களது வசதியையும் கருத்தில் கொண்டு சென்னை திருநெல்வேலி இடையே இயக்க திட்டமிட்டிருக்கும் 20631/20632 வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் தென் தமிழக மக்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்வதற்கு வசதியாக ஹைதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
டபுள் குஷி: ஒருவேளை, நாகர்கோவில் வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்படுமானால், அது தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதுடன், விஜய வசந்த்தின் அடுத்தக்கட்ட அரசியலுக்கும், அழுத்தமான "விதை" போட்டதுபோலவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications