வன்னியர் இடஒதுக்கீடு: தமிழக அரசுடனான பிப்.3 பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்பு
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 3-ந் தேதி தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும் என அக்கட்சியின் சிறப்பு நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமகவின் கோரிக்கை. இது தொடர்பாக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது பாமக.
பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு என கோரிக்கையை பாமக முன்வைத்தது. இது தொடர்பாகவும் அமைச்சர்கள் குழு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு நிர்வாக குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பிப் 3-ந் தேதி தமிழக அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிப்ரவரி 3-ந் தேதி பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவு எடுப்பது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.