விஏஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை.. கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவோம்..டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையில் தமிழகமெங்கும் தங்கு தடையின்றி நடைபெறும் மணல் கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதே அவருக்கு செலுத்தும் அஞ்சலி என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் நேற்று தனது அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலைக்கு அரசியல் கட்சித்தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், தான் முன்பு பணியாற்றிய இடங்களிலும் தற்பொழுது பணியாற்றிய இடத்திலும் மணல் கனிம வளம் உள்ளிட்ட அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல் பணியாற்றி அனைவராலும் பாராட்டப்பட்டவர். அவர், தான் பணியாற்றி வந்த முறப்பநாடு எல்லைக்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாத மணல் கொள்ளையர்கள் இப்பொழுது அவரையே வெட்டி சாய்த்து இருக்கிறார்கள்.
லூர்து பிரான்சிஸ் அவரின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம். அதே நேரம் இந்த நஷ்ட ஈடு மட்டுமே தீர்வாகாது என்கிறார்.
தொடர்ந்து அது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி லூர்து, பிரான்சிஸ் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்து இந்த வழக்கை விரைந்து முடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது தமிழகத்தில் இதுபோன்ற மணல் உள்ளிட்ட கனிம வளக் கொள்கையை கொள்ளைகளை அறவே தடுத்து நிறுத்துவதும் தான் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களுக்கு செலுத்தக்கூடிய உண்மையான மரியாதை ஆகும் என்கிறார்.
தாமிரபரணி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி பணியாற்றும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications