“பெரியாரைப் பார்க்காவிட்டால் நான் கம்யூனிஸ்ட் ஆகி இருப்பேன்” - இதை கருணாநிதி எப்போது சொன்னார்?
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதற்காக துறைவாரியாக அவரது பங்களிப்புகளை எடுத்துப் பேச அமைச்சர்கள் தலைமையில் குழுக்களையும் அமைத்துள்ளது.
இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் பலரும் கருணாநிதியின் பங்களிப்பை அலசி ஆராய்ந்து வருகிறார்கள். நாம் சிலரிடம் கருணாநிதியின் பங்களிப்பு குறித்து பேசினோம்.
கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனிடம் பேசினோம். இவர் எழுதிய நூல் 'பென்குவின்' வெளியீடாக வந்துள்ளது. அதில் கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையை உலக சரித்திரங்களுடன் ஒப்பிட்டு, மிக விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் பன்னீர்செல்வன்.

என்ன சொல்கிறார் பன்னீர்செல்வன்?
"எனக்குக் கருணாநிதியைப் பற்றி நினைக்கும்போது வியப்பாக இருக்கும் விசயம் என்னவென்றால், எப்பொழுதும் அவரைவிட அதிகம் Privilege உள்ளவர்களோடுதான் அவர் இருந்திருக்கிறார்.
உதாரணமாகச் சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க காலத் தலைவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள். கருணாநிதி பல்கலைக்கழகம் அளவுக்குச் செல்லாதவர். அதன் காரணமாக மற்ற தலைவர்களுக்கும் இவருக்கும் பெரிய இடைவெளி இருந்ததே இல்லை. நெடுஞ்செழியன் எம்.ஏ., படித்தவர். க.அன்பழகன் எம்.ஏ., அண்ணாதுரை எம்.ஏ.,
ஆனால் கருணாநிதி எம்.ஏ. படித்தவர் இல்லை. அறிவுத்தளத்தில் இவர்களுக்கும் சற்றும் சளைத்தவராக கருணாநிதி இருந்ததே இல்லை.
அவர் சேலம் மாடர்ன் தியேட்டரில் வேலைசெய்வதற்காகச் சென்றபோது, அங்கே எல்லிஸ் ஆர். டங்கனும் சுந்தரமும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்த திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள்.

கருணாநிதியின் பயண அனுபவம் என்பது திருவாரூரிலிருந்து தொடங்கி, பாண்டிச்சேரிவரை வந்து அங்கிருந்து சேலம்வரை சென்றதுவரை மட்டுமே உள்ளது. அங்கேயும் எல்லிஸ் டங்கனுக்கும் சுந்தரத்திற்கும் சளைத்தவராக கருணாநிதி இருக்கவே இல்லை.
மற்றவர்களின் Privilege உடன் ஒப்பிடும்போது தன்னுடைய உழைப்பும் அறிவினாலும் இட்டு நிரப்பக்கூடிய பெரிய ஆளுமையாக கருணாநிதி இருந்திருக்கிறார். எனக்குள் கருணாநிதி என்பவர் நம்பிக்கையின் ஊற்றாக மாறத் தொடங்குகிறார்.
அவரிடம் 'நா', 'பேனா' என இரண்டே இரண்டு சொத்துகள்தான் உள்ளன. அதை வைத்துக்கொண்டு, நான் மற்றவர்களுக்கு எப்போதும் சளைத்தவன் அல்ல என்று தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அந்த வியப்புதான் எனக்குக் கருணாநிதியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்தது.

கருணாநிதியின் உரைநடை என்பது முதன்முதலாக ஒரு 'செக்யூலர் தமிழ்' என்ற வடிவில் வெளிப்படுகிறது. அதற்கு முன்னால் உள்ள உரைநடையை நாம் படித்தால், அதிலுள்ள சொற்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஒருவர் 'ஆத்துக்குப் போனேன்' என்று எழுதினால், அவரின் பின்புலம் நமக்குப் புரிந்துவிடும்.
ஆனால், அந்த அடையாளங்கள் இல்லாத ஒரு பொது உரைநடை தமிழை கருணாநிதி உண்டாக்கினார். அவருடைய உரைநடைக்கு எந்தப் பொழிப்புரையும் வேண்டாம். அந்த மாதிரியான மொழியை உருவாக்கியதில் அண்ணாதுரைக்கும் கருணாநிதிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் முன்னாலேயே வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்கள் கவிதையில் அந்தப் பொதுத் தமிழை உருவாக்கிவிட்டார்கள். அவர்களின் கவிதைக்கு பொழிப்புரை தேவையில்லை. படித்தால் புரிந்து கொள்ளலாம்.
ஆனால், உரைநடையில் அவர்கள் செய்யவில்லை. அதனை இவர்களின் புதிய எழுத்து செய்தது. உரைநடையில் இலக்கிய நயம் குன்றாமல், அதை ஜனநாயக வடிவமாக அண்ணாவும், கருணாநிதியும் முன்வைத்தார்கள். அதுவே இவர்களின் எழுத்தின் சாதனையாக எனக்குப் படுகிறது" என்கிறார் பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

சாஹித்ய அகாதெமி போன்ற உயரிய விருதினைப் பெற்றவர் எழுத்தாளர் இமையம். இவர் எழுத்தாளர் என்றாலும் அடிப்படையில் திமுககாரர். அவர் என்ன சொல்கிறார்?
"இன்றைக்கு தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண்கள் பதவிக்கு வந்துள்ளார்கள். உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என எல்லா இடங்களிலும் அவர்கள் இருக்கிறார்கள். 33% இடஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முழுக் காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
அவர்தான் தமிழ்நாட்டை நவீனமாக வடிவமைத்தார். பல துறைகளில் தமிழ்நாட்டை இந்தியாவிற்கே முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார். இன்று நீங்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரிவரை எந்த ஊருக்குச் சென்றாலும் வழிநெடுகிலும் உள்ள பாலங்கள், மேம்பாலங்கள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை.
இன்று ஸ்ரீபெரும்புதூர் அல்லது கிழக்கு கடற்கரைச் சாலையில் இயங்கிவரும் பெரும்பாலான நிறுவனங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் அவருடைய சிந்தனையால் உருவானவை. கருணாநிதி தமிழ்நாட்டின் தொழில்துறையின் முகமாக இருந்திருக்கிறார்.

நிச்சயமாக கருணாநிதி என்ற பெயரை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டின் நலன் பற்றிய திட்டங்கள் எதையுமே சொல்லமுடியாது. அந்த அளவுக்கு அவர் ஆணிவேராக இருந்திருக்கிறார்" என்கிறார்
இந்த இருவரையும் தொடர்ந்து மூன்றாவதாக இடதுசாரி எழுத்தாளர் அருணனிடம் பேசினோம். அவர் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, கருணாநிதி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
"என்னுடைய 'தமிழகத்தில் சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு' நூலை 1999 ஆம் ஆண்டு கருணாநிதிதான் வெளியிட்டார். அப்போது அவர் முதலமைச்சராக இருந்தார். விழாவுக்கு வந்த அவர், 'நான் முதல்வராக இருப்பதால் மேலோட்டமாகப் படித்துவிட்டு வந்து பேசுவேன் என்று அருணன் நினைத்துவிடக் கூடாது.

இந்தநூலை நான் முழுமையாக வரிக்கு வரி படித்துவிட்டேன்' என்று எடுத்த எடுப்பிலேயே குறிப்பிட்டார். அந்தநூலில் திராவிட இயக்கம் பற்றிய எனது பார்வையை முன்வைத்திருந்தேன். குறிப்பாக சுயமரியாதை சமதர்ம கட்சி பற்றி சில விசயங்களை எழுதி இருந்தேன்.
அதைப் படித்துவிட்டு, கருணாநிதி, 'நான் பெரியாரைப் பார்க்காமல் இருந்திருந்தால், திராவிட இயக்கம் என்ற ஒன்று உருவாகாமல் இருந்திருந்தால், நானும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்' என்றார். அன்று அவர் பேசிய பேச்சு, பல பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது. அந்த நிகழ்வை என் வாழ்நாளில் நான் மறக்கமுடியாது" என்றவர் சற்று யோசனைக்குப் பிறகு மறுபடியும் தொடங்கினார்.

"அண்ணாதுரை ஆட்சி வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் ஓடிய பேருந்துகள் தனியாரிடம் இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்தபோது கருணாநிதி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அவர்தான் தனியாரிடம் இருந்த பேருந்துகளை அரசுடைமையாக்கினார். அன்றிலிருந்து, பின்னர் முதலமைச்சராகப் பதவியேற்றதுவரை கருணாநிதி மக்கள் நலன் சார்ந்து பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்.
கை ரிக்ஷாவை ஒழித்தது, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்தது, ஏழை எளிய மக்களுக்காக குடிசைமாற்று வாரியத்தை உருவாக்கியது என அவர் நிறைவேற்றிய பல திட்டங்களில் கம்யூனிஸ்ட் கொள்கையின் 'சாயல்கள்' இருந்துள்ளன. அதை நான் அறிவேன். மக்களும் அறிவார்கள்" என்கிறார் அருணன்.












Click it and Unblock the Notifications