'பாஜக கூட்டணியே அதிமுக தோல்விக்கு காரணம்.. விஜய் ரசிகர்களின் வெற்றி என்பது..' திருமா பரபர கருத்து
சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைத்ததே அதிமுகவின் சரிவுக்குக் காரணம் என்று கூறிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்க வகையில் இருந்தாலும் கூட, அதை அவரது அரசியல் வருகையின் ஒத்திகையாகப் பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் தொடக்கத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெருவாரியான வெற்றியைப் பெற்றது. எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தன.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. அதேநேரம் இந்தத் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றினர். இது விஜய்யின அரசில் வருகையின் முதல் படி எனப் பரவலாகக் கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தினர்
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினரை விட சுயேட்சைகள் அதிகம் வென்றுள்ளனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்க வகையில் இருந்தாலும் கூட, அதை அவரது அரசியல் வருகையின் ஒத்திகையாகப் பார்க்க முடியாது. அரசியலுக்கு யாரும் வரலாம். அப்படி விஜய் அரசியலுக்கு வந்தாலும் விசிக வரவேற்கும். ஆனால், இந்தத் தேர்தல் என்பது கடந்த 5 மாத ஆட்சியில் திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் தானே தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்.

அதிமுக தோல்வி
தொடர்ந்து அதிமுக தோல்வி மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்துப் பேசிய அவர், "ஜெயலலிதா இருந்த போது அதிமுகவும் அதன் வாக்கு வங்கியும் கட்டுக்கோப்பாக இருந்ததைப் போல இப்போது இல்லை என்பதையே இந்தத் தோல்வி உணர்த்துகிறது. அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வமாக பொதுச் செயலாளரை அவர்கள் தேர்வு செய்ய முடியவில்லை. அவர்கள் பாஜகவுடனும் ஆர்எஸ்எஸ் உடனும் உறவாடி வருகின்றனர். பாஜகவைச் சார்ந்து இயங்கும் வரை அதிமுகவின் சரிவு தொடரும்.

சசிகலா அரசியல் நுழைவு
சசிகலா அரசியல் நுழைவு என்பது அவரது தனிப்பட்ட முடிவு. ஏன் அரசியலுக்கு வருகிறார் என்பதை நாம் தடுக்க முடியாது. அதேபோல சசிகலா அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது. அவர் தலைவர்கள் சமாதிக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. இந்த உரிமை அனைவருக்கும் உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். மேலும், நீட் விலக்கு விவகாரத்தில் திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய திருமாவளவன், "நீட் விலக்கு மசோதா நிறைவேற்றிய பிறகு அவர்கள் அமைதி காத்திருக்கலாம்.

நீட் விவகாரம்
ஆனால் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்கள் விலக்கு கேட்கவில்லையே என யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ்நாடு முதல்வர் இந்த விவகாரத்தில் மற்ற மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை" என்றார். மேலும் கார்ப்ரேட் நலன் காக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறுவதாகவும் அவர் சாடினார்.












Click it and Unblock the Notifications