உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்.. திருமாவளவனை உலுக்கி எடுத்த தாயின் உருக்கமான வேண்டுகோள்
சென்னை: தன் உயிர் பிரியும் நேரத்தில் கூடவே இருக்க வேண்டும் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தம்மிடம் கேட்டுக் கொண்ட போது தம் அடிவயிறு கலங்கிப் போனது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உருக்கமாக ட்விட்ட்ரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியலின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான தொல்.திருமாவளவன், கொண்ட கொள்கைக்காக திருமணம் செய்து கொள்ளாமல் அரசியல் பயணத்தை தொடர்கிறார். அரசு ஊழியராக இருந்து பின்னர் தலித்துகளின் விடுதலைக்கான பயணத்தில் இணைத்துக் கொண்டவர் திருமாவளவன்.

சீற்றமும் நெகிழ்வும்
திருமாவளவன் மேடைகளில் அரசியல் கருத்துகளை சீற்றத்துடன் முன்னெடுத்து வைப்பவர்; இந்துத்துவா கோட்பாடுகளுக்கு எதிராக பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய பார்வைகளில் உரத்து முழங்கக் கூடிய கம்பீரமான அரசியல்வாதி திருமாவளவன். தமது அப்பா, தம்பி, அக்கா, அம்மா தொடர்பாக திருமாவளன் பேசும் போதும் எழுதும்போதும் அவரை அறியாமலேயே நெகிழ்ந்து போய்விடுவார்.

திருமாவளவன் தாயார் உடல்நலன்
சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் திருமாவளவனின் தாயார் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை பார்க்க கடந்த 23-ந் தேதி சென்ற போது, அதிமுக பொதுக்குழுவுக்கு சென்ற தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தனது தாயின் உருக்கமான வேண்டுகோள் தொடர்பாக திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மருத்துவ பரிசோதனை
எண்பதை நெருங்கும் வயது. திடீரென அம்மாவுக்கு நெஞ்சுவலி. ஓரிரு நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது. அம்மாவை அவசரமாக திருச்சிக்கு அழைத்துச் சென்றபோதுதான் தகவலறிந்து சென்னைக்கு அழைத்து வர செய்தேன்.சூன் 22 மாலை நடந்த ஆஞ்சியோ சோதனையில்தான் அவருக்கிருந்த ஆபத்து தெரியவந்தது.

அம்மாவின் வேண்டுகோள்
இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்து ஓரிடத்தில் மட்டும் அடைப்பு நீக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் அமைவதற்கு ஏதுவாக 'ஸ்டென்ட்' எனும் ஒன்றைப் பொருத்தியுள்ளனர். இது அறுவை சிகிச்சை அல்ல. ஆனாலும் இது ஒரு சவாலான மருத்துவப் பணி. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. அம்மா: "ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற; திடீர்னு எனக்கு நெஞ்ச அடச்சுகிட்டு ஆவி பிரியுற மாதிரி வலி வந்துச்சு; நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்குப் போனேன். உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்" அம்மா இப்படி சொன்னபோது அடிவயிறு கலங்கியது. இவ்வாறு தொல்.திருமாவளவன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications