ஆர்எஸ்எஸ்-ம் சிபிஎம், சிபிஐ, விசிகவும் ஒன்றா?மனித சங்கிலிக்கு ஏன் அனுமதி மறுப்பு? திருமாவளவன் கேள்வி
சென்னை: மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகளை ஒப்பிட்டு அக்டோபர் 2-ந் தேதி மனித சங்கிலிக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: அக்டோபர் 02 - காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல; மாறாக, மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அறப்போராட்டத்துக்குத் தடை விதித்திருப்பது எவ்வகையில் ஞாயம் என்னும் கேள்வி எழுகிறது.

காவல்துறை சொன்ன காரணம்
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் அதற்குப் பின்வருமாறு காரணங்களைக் கூறுகிறது காவல்துறை. ' இந்திய ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க, கண்காணிக்க காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்க இயலாது' - என குறிப்பிட்டு இருந்தது.

தமிழக அரசு காரணம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில், அவை இரண்டும் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அல்ல. ஆனால் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் விசிகவும் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளாகும்.

மனித சங்கிலிக்கு ஆதரவு
மூன்று அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அறிவித்திருந்த "சமூக நல்லிணக்க மனித சங்கிலி" அறப்போராட்டத்துக்கு எமது தோழமை கட்சிகளான மதிமுக, மமக, தவாக, நாதக, எஸ்டிபிஐ, சிபிஐ (எம்.எல்- வி), தபுக என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் திக, திவிக, தபெதிக, போன்ற சமூகநீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

மனித சங்கிலிக்கு அனுமதி தேவை
அதாவது இந்தப் போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும். எனவே, இதனை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை. மதவெறி ஃபாசிச ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும். எனவே, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று நடக்கவுள்ள எமது 'சமூக நல்லிணக்க மனித சங்கிலி' அறப்போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications