1978-ல் விழுப்புரத்தில் 12 தலித்துகள் படுகொலை-சமூகநீதிப் போராளிகளாக அறிவிக்க விசிக திடீர் கோரிக்கை!
சென்னை: விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமி நினைவு மணிமண்டபம், இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு நினைவு மண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 1978-ம் ஆண்டு விழுப்புரம் நகரத்தில் கொல்லப்பட்ட 12 தலித்துகளையும் சமூக நீதிப் போராளிகளாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: விழுப்புரத்தில் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு நினைவு மணிமண்டபம், இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு நினைவு மண்டபம் ஆகியவற்றைத் திறந்து வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான நந்தன் கால்வாய்த் திட்டம் (304 கோடி) உட்பட சுமார் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய திட்டங்களை அறிவித்தார். அவருக்கு விழுப்புரம் மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

21 இட ஒதுக்கீட்டுப் போராளிகளை அங்கீகரித்துப் பெருமைபடுத்தியதுபோல் 1978 இல் விழுப்புரம் நகரில் கொல்லப்பட்ட தலித்துகள் 12 பேரையும் சமூகநீதிப் போராளிகளாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.
21 இடஒதுக்கீடு போராளிகள் யார்?
1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீடு கோரி வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் மிகப் பெரும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது அப்போதைய அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியாகினர். இடஒதுக்கீடுக்காக போராடி உயிர் பலியானதால் 21 பேரும் சமூக நீதி போராளிகளாக அறிவிக்கப்பட்டு நினைவு மண்டபம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் விழுப்புரத்தில் திறக்கப்பட்டது.
1978-ல் விழுப்புரத்தில் நடந்தது என்ன?
1978-ம் ஆண்டு விழுப்புரம் நகரில் உள்ள பெரியபறைச்சேரி பகுதியில் இரு ஜாதியினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் அழிக்கப்பட்டன. 12 தலித்துகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தண்டனை குறைப்பின் அடிப்படையில் அவர்கள் விடுதலையாகினர்.












Click it and Unblock the Notifications