ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலுக்குப் பின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சரவையிலும் இடம் பெற்றதால் திருமாவளவன் மீது அதிருப்தியில் இருந்த பனையூர் பாபு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதற்கிடையே மேலும் சில தலைவர்களும் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளதால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள கூட்டணி மாற்றங்கள், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக, தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததுடன் அமைச்சரவையிலும் இணைந்திருப்பது, விசிகவில் உள்கட்சி அதிருப்தியை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.
விஜய்
ஆனால் தனிப்பெரும்பான்மை இல்லாததால், ஆட்சியமைக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அவசியமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தன. ஆரம்பத்தில் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டிலேயே இந்தக் கட்சிகள் இருந்தன. ஆனால் பின்னர் அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
வன்னியரசு
பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா, கூட்டணிக் கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதையடுத்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தவெக அமைச்சரவையில் விசிக இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு அமைச்சராக பதவியேற்றார்.
திமுக கூட்டணி
இந்த முடிவு அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக கூட்டணியில் இருந்த கட்சி, தவெக அமைச்சரவையில் இணைந்திருப்பது திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் விசிக ஆதரவாளர்கள் இடையே வார்த்தைப் போரும் வெடித்துள்ளது.
இந்த சூழலில், விசிகவுக்குள்ளும் சில அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கட்சியில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், திருமாவளவனின் சமீபத்திய அரசியல் முடிவுகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
விசிக உட்கட்சி குழப்பம்
அவர்களில் முக்கியமாக பனையூர் பாபு உள்ளிட்ட சிலர் கட்சியில் இருந்து விலகும் மனநிலையிலிருக்கிறார்கள் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவியது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது மற்றும் அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கியத்துவம் தரப்படாதது ஆகியவை இந்த அதிருப்திக்குக் காரணமாக கூறப்படுகிறது.
திமுக தரப்பு
"தேர்தலில் வாய்ப்பு கிடைத்திருந்தால் அமைச்சராகும் நிலை வந்திருக்கலாம். ஆனால் இரண்டுமே மறுக்கப்பட்டுவிட்டது" என்ற மனநிலையில் சில முன்னாள் நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் திமுக தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. மேலும், விரைவில் சில முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணையலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திருமாவளவன்
இதற்கான பின்னணி வேலைகள் அமைதியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சில நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களையும் இணைத்து அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் திருமாவளவன் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசிகவில் பரபரப்பு
கட்சிக்குள் பெரிய அளவிலான உடைப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மூத்த நிர்வாகிகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், விசிகவில் இருந்து விலகும் தலைவர்களை திமுகவில் சேர்க்கக் கூடாது என்று திருமாவளவன் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல், சிலர் திமுகவுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications