திருமாவளவனுக்கு ஒரு மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட்! பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை! வெளிநாடு? வெளிமாநிலம்?
சென்னை: டைஃபாய்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவன் அடுத்த ஒரு மாத காலத்துக்கு முழு ஓய்வில் இருக்க திட்டமிட்டுள்ளார்.
கட்சிக்காரர்கள், கட்சிப்பணிகள், அரசியல் நிகழ்வுகள் என எல்லாவற்றிலிருந்தும் ஒரு மாத காலம் ஒதுங்கியிருக்க முடிவெடுத்துள்ள அவர் அடுத்த ஒரு மாத காலம் உடலையும், மனதையும் புத்துணர்வு பெற வைக்கும் வகையில் தியானம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடவுள்ளாராம்.

சிறுத்தை பதுங்குவது பாய்வதற்கு தான் எனக் கூறும் அவருக்கு நெருக்கமானவர்கள், ஒரு மாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் களமாடும் திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் என்கிறார்கள். கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை 3 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வாங்கும் யோசனையில் உள்ள திருமாவளவன் அதற்கான காய் நகர்த்தலிலும் ஈடுபட்டுள்ளார்.
விசிகவின் கட்டமைப்பு வலிமைப்படுத்தப்பட்டுள்ளதையும், உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் புள்ளி விவரங்களுடன் திமுகவிடம் எடுத்துச்சொல்ல தயாராகி வருகிறார். இதனிடையே விசிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
திருமாவளவன் தொடர் அலைச்சல், பயணம், என இருப்பதால் நுரையீரல் தொற்று பிரச்சனையும் அவ்வப்போது அவதிப் படுத்துவதால் கேரளாவில் அதற்கான இயற்கை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு ஓய்வெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே திருமாவளவன் ஓய்வு குறித்து அவருக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, ''தலைவர் ஒரு மாதம் ஓய்வெடுக்கப் போவது உறுதி. வெளிநாட்டிலா, வெளிமாநிலத்திலா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை. இங்கிருந்தால் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்காமல் இருக்க முடியாது.'' என்று மட்டும் கூறினார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை வைகோ, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் திருமாவளவனை அவர் சிகிச்சை மேற்கொண்டு வரும் சூர்யா மருத்துவமனைக்கே சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். டிஸ்சார்ஜ் ஆகிய பிறகு நலம் விசாரிக்க வேண்டி கட்சி நிர்வாகிகள் அதிகம் சென்னைக்கு படையெடுப்பார்கள் என்பதால் தான் இந்த குறைந்தநாள் ஓய்வுத் திட்டமாம்.












Click it and Unblock the Notifications