பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக பற்றி கவலை கொள்வது ஏன்? திருமாவளவன் வெளிப்படையாக சொன்ன விளக்கம்!
ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுகவின் கட்டுக்குள் பாஜக இருந்திருக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் கால்பதிக்க அதிமுகவை விழுங்கி செமிக்க கூடிய வகையில் பாஜக செயல்படுவதால், அதிமுகவை எச்சரிக்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா கேட்ட நிலையில், தற்போது இரு தலைவர்களும் அடுத்தடுத்து பாஜகவை சந்திக்கும் நிலை இருப்பதாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்குள் முழுமையாக அதிமுக சென்றது. இதனை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே, திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திருமாவளவன் வாழ்த்து
இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வை தொடங்கிய பழனிசாமி, இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்கு மட்டுமே பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே என்று குறிப்பிட்டிருந்தார்.

திருமாவளவன் விளக்கம்
சில வாரத்திற்கு முன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருந்தார். இதனால் திமுகவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் திருமாவளவன் அதிமுகவுக்கு வாழ்த்து கூறியதாக விமர்சிக்கப்பட்டது. இதுதொடர்பாக பேசிய திருமாவளவன், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் விசிகவுக்கு இல்லை என்றும், அதிமுக பற்றிய வருத்தம் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.

அதிமுக தோளில் பாஜக
பின்னர் அதிமுக பற்றிய வருத்தத்திற்கான காரணம் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவின் தோளில் ஏறி தமிழ்நாட்டில் கால்பதிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அது மிகவும் ஆபத்தானது. ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவால் இதுபோல் செயல்பட முடியாது. கூட்டணி என்று அடிப்படையில் ஜெயலலிதா முடிவை எடுத்திருந்தாலும், பாஜகவின் கட்டுக்குள் அதிமுக சென்றிருக்காது.

மோடியா? லேடியா?
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக மீதான விமர்சனத்தை பின் வைத்துவிட்டு, மோடியா? லேடியா? மோதி பார்க்கலாம் என்று கோஷமிட்டார். அதுமட்டுமல்லாமல் ஒரு படி மேல் என் வாழ்வில் செய்யக் கூடாத தவறை செய்துவிட்டேன். அந்த பிழைக்கு பரிகாரம் செய்யும் வகையில் தான் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தேன். இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஆவேசமாக ஜெயலலிதா தெரிவித்தார்.

பாமக, பாஜக கட்சிகள்
ஆனால் இன்று ஒட்டுமொத்த அதிமுகவும் பாஜகவை நம்பி கிடக்கிறது. இருவரும் போட்டிப்போட்டுக் கொண்டு பாஜகவினரை சந்திக்கிறார்கள். இந்த பலவீனத்தை பயன்படுத்தி பாஜகவையே விழுங்கி செமிக்க கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. அது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும். பாஜக மற்றும் பாமக கட்சிகள் இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது. அது எங்களின் கொள்கை முடிவு என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications