அதிமுகவுடன் கூட்டணி? உடனடியாக அதே மேடையில் நிராகரித்த திருமாவளவன்! ‘நச்’ விளக்கம்!
சென்னை: "திருமாவளவன் நம்மோடுதான் இருக்கிறார்" என முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை கூறிய நிலையில் அதே மேடையிலேயே அவருக்கு பதில் கொடுத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சார்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இன்பதுரை பேச்சு: இந்த நிகழ்வில் பேசிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை, திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசினார். இன்பதுரை பேசுகையில், "திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்." என்றார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, "நான் அரசியல் பேச வரவில்லை.. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் எனத் தெரியும். அவரும் ஒரு வழக்கறிஞர். திருமா நம்மோடுதான் இருக்கிறார். எப்போதும் நம்மோடுதான் இருப்பார். நல்லவர்கள் பக்கம் இருப்பார்" எனக் கூறினார்.
திருமாவளவன் கொடுத்த பதில்: இன்பதுரையின் இந்தப் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் விசிக தொடர்ந்து வரும் சூழலில், கூட்டணி தொடர்பாக விசிக-வை முன்வைத்து அரசியல் களத்தில் விவாதங்கள் நடந்து வரும் சூழலில், இன்பதுரை, திருமா நம்மோடு தான் இருக்கிறார் எனப் பேசினார். இதையடுத்து, திருமாவளவன் பேசும்போது, இன்பதுரைக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார்.
இன்பதுரைக்கும் இதுதான் பதில்: திருமாவளவன் பேசுகையில், "வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும். உங்களோடு களத்தில் நிற்போம். மக்களோடு இருப்போம். அன்புச் சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும் இதுதான் பதில். கட்சிகளோடு அல்ல, மக்களுக்காக போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அங்கு நிற்போம். அடையாளம் தாண்டி சிந்திப்பதில் பக்குவம் பெறுவோம்.
யாரும் எந்தக் கட்சியிலும் இருக்கலாம். அவர்களை எதிர்கொள்ளும்போது கைகுலுக்கிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உங்கள் கொள்கை உங்களுக்கு. எங்கள் கொள்கை எங்களுக்கு. தேர்தல் அரசியல் என்பது ஒரு நிலைப்பாடு, உத்தி. அதை எல்லாம் தாண்டி மனித உறவுகள் மேம்பட வேண்டும். மக்களுக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும்.
தேர்தல் என்பது நாட்டு நலன், கட்சி நலனை அடிப்படையாக கொண்டது. காலச்சூழலில் முரண்பாடான முடிவைக் கூட எடுக்க நேரிடும். கடுமையாக எதிர்க்கும் பாஜகவுடனே ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டம் போட்டு அவர்களுடன் நின்றார்கள். அதை எல்லா இடத்திலும் பொருத்திப் பார்க்கக்கூடாது" எனப் பேசினார்.
அரசியலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை: பின்னர் இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், "நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். இன்னொரு கூட்டணிக்கான தேவையே எழவில்லை. விசிக சேர்ந்து உருவாக்கி இயங்கிக் கொண்டிருக்கிற கூட்டணி இந்தியா கூட்டணி. ஆகவே, இன்னொரு கூட்டணி உருவாக்கும் தேவை இல்லை.
இன்பதுரை பேசியது தேர்தலுக்கான அழைப்பு கிடையாது. பொதுவான கருத்து. அதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் அரசியல் வேறு, மக்களுக்காக போராடுவது வேறு. அவர் விடுத்த அழைப்பு 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்கானது. அதற்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் கிடையாது." என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications