விசிகவில் நடக்கும் அதிரடி மாற்றம்! 234 மாவட்ட செயலாளர்கள்.. திருமா திட்டம்! விஜய்யால் சூடாகும் களம்!
சென்னை: விசிகவில் 234 மாவட்டச் செயலாளர்கள் செயல்படுவார்கள். தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களும் அப்படியே தொடர்வார்கள், மீதம் உள்ள 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தால், பல்வேறு கட்சிகளும் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளன.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தேர்தல் அடிப்படையிலான நில எல்லையை வரையறையாகக் கொண்டு கட்சி இயங்குவதுதான் சரி என்ற அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளரை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். இதை நீண்ட காலமாக விவாதித்து, கட்சியினரை தயார் செய்து, அனைவரது ஒப்புதலோடு நடைமுறைப்படுத்த உள்ளோம்.

இது வேர் அளவில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சி. இதன் மூலம் மக்களை எளிதாகச் சென்று சேரவும், தேர்தல் காலத்தில் பணியாற்றவும் நிர்வாகிகளுக்கு எளிதாக இருக்கும். இப்பணிகள் ஒரு வாரத்தில் தீவிரப்படுத்தப்படும். தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களும் அப்படியே தொடர்வார்கள், யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள். மீதம் உள்ள 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் கண்டுள்ள நிலையில், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், திமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தால், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டசபை தேர்தலை நோக்கி அதிரடி வியூகங்களை வகுத்து வருகின்றன. தமிழக அரசியல் கட்சிகளிடையே, விஜய்யின் அரசியல் பிரவேசம் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. இந்தச் சூழலில் விசிகவும், கட்சியின் கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications