"சாதி".. பானைக்கே ஓட்டு..ஊருக்கே தெரியும் யார் ரவுடிகள் என்று.. வீடியோ போட்டு கொந்தளித்த திருமா
விசிக திருமாவளவன் போராட்டத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
சென்னை: அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலைக்கு காரணம் அதிமுக - பாமக என்று பகிரங்கமாக தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், இதை கண்டித்து போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.
அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன்.. 20 வயதாகிறது.. இவரது நண்பர் சூர்யா.. அவருக்கு 25 வயதாகிறது.. 2 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளது.. தேர்தல் முன்விரோத தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு ஆளான மேலும் 3 பேர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்..
சுருக்கம்
இந்தச் சம்பவம் தொடர்பாக, மொத்தம் 8 பேர் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது காவல்துறை. இதில் 4 பேர் கைதாகி உள்ளனர்.. மற்றவர்களை தேடி வருகிறார்கள். இரட்டை கொலையில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வாக்கு அரசியல் இருப்பதாக திருமாவளவன் அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதன் சுருக்கம் இதுதான்:
படுதோல்வி
"அரக்கோணத்தில் ஆளும் தரப்பு படுதோல்வியை சந்திக்க காத்திருக்கிறார்கள்.. அதிமுக பாமக - பாஜக கூட்டணிக்கு உரிய பாடத்தை செலுத்தும் தேர்தலாக இது அமைந்திருக்கிறது. அரக்கோணத்தில்ஆதிக்குடியினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பு சமூகத்தினரும் பானை சின்னத்துக்கு வாக்களித்ததை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.. வாக்குச்சாவடிகளிலேயே தலித் இல்லாத மக்களும் பானை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு, வெளிப்படையாகவே பானை சின்னம் வெற்றி பெறும் என்று பேசியிருக்கிறார்கள்.
திருமணம்
இதையெல்லாம் பொறுத்து கொள்ள முடியாத சாதி வெறி கும்பல், மணற்திருட்டு கும்பல், அப்பாவி இளைஞர்களான அர்ஜுன், சூர்யா இருவரையும் கொடூரமாக கொன்றுள்ளனர்.. ஒருவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதும், இன்னொருவருக்கு திருமணம் ஆகி 15 நாட்களே ஆகி இருப்பது தெரியவந்துள்ளது.
சாதி வெறி
சாதி வெறியை தூண்டுவதும், வன்முறையை தூண்டுவதும், ரத்த வெறியை தூண்டிவிடுவதும், அவர்களின் வாடிக்கையாக இருக்கிறது, கலாச்சாரமாகவும் இருக்கிறது.. ஆனால், அந்த கும்பல்தான் நம்மீது ரவுடிகள் என்றும், கட்டப்பஞ்சாயத்து கும்பல் என்றும் பழி சுமத்துகிறது.. ஊர் உலகத்துக்கே தெரியும் யார் ரவுடிகள் என்று? யார் கட்ட பஞ்சாயத்து செய்கிறார்கள்? யார் மணல் திருடி பிழைப்பு நடத்துகிறார்கள்? யார் வன்முறை செய்கிறார்கள் என்று?
நன்மதிப்பு
இதுபோன்று சமூக விரோத செயலை செய்பவர்கள், தொடர்ந்து விசிக மீது பழி செலுத்தி வருகிறார்கள்.. இருந்தாலும், நாம் அனைத்தையும் பொறுத்து கொண்டு, சகித்து கொண்டு, அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற, நாம் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று மிக கவனமாக பயணித்து வருகிறோம்.
சிறுத்தைகள் சிறுத்தைகள்
இந்த கொடூரமான இரட்டை படுகொலை மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தந்துள்ளது.. அந்த 2 இளம் சிறுத்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. இந்த சமயத்தில், நம்முடைய கண்டனத்தை, ஒழுங்குப்படுத்தபட்ட முறையில் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.. ஏனெனில், நாம் எவ்வளவு கட்டுப்பாடாக செயல்பட்டாலும் கூட, மிக எளிதாக சாதி வெறியர்கள், மதவெறியர்கள் பழி சுமத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.. அவதூறை பரப்பி ஒரு நெருக்கடியை தர நினைக்கிறார்கள்..
பமக
தமிழக தேர்தல் களத்தில், சனாதன எதிர்ப்பு களமாக விசிகவுக்கு பெரும் பங்கு உண்டு., அதிமுகவுக்கான களம் என்றில்லாமல், அதிமுக - பாமக - பாஜக என்ற இந்த முக்கூட்டு முற்போக்கு சக்திகளுக்கு எதிராக மாற்றியமைத்ததில், அதிலும் பாஜகவுக்கு எதிரான அரசியல் களமாக மாற்றியதில் விசிகவுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு... அதை யாரும் மறுத்துவிட முடியாது..
ஆர்ப்பாட்டம்
மதவெறிக்கு எதிராக, சாதிக்கு வெறிக்கு எதிராக, தொடரந்து சனாதனத்துக்கு எதிராக கட்டமைப்பதில் நாம் கவனம் செலுத்தியும் வருகிறோம்.. அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று வருகிறோம்.. அதனால்தான் நம்மீது ஆத்திரமும் கொலை வெறியும் வருகிறது. இந்த கொடூரமான படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.. இதை வெற்றிகரமாக நடத்த வேண்டி உள்ளது.. போராடுவதால், கண்டனங்களை எழுப்புவதால் என்ன பயன் என்று விரக்தி அடையகூடாது.." என்று தெரிவித்துள்ளார்.