சீமான் vs வன்னி அரசு- தலித்துகளை இழிவுபடுத்துன அந்த 2 சினிமா காட்சிகள்- தவிர்க்க சொல்லலையே ஏன்?
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு தரப்புக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. திரெளபதி,ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் போனது ஏன்? என சீமானுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், உலகத்துக்கே தெரியும் அக்னி கலசம் என்பது வன்னியர் சங்கத்தின் முத்திரை என்பது. அதை ஏன் ஜெய்பீம் படத்தில் வைக்க வேண்டும்? தவிர்த்திருக்கலாம். உண்மை பாத்திரங்களான அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் பயன்படுத்தவில்லை? கோவிந்தன் ஏன் இடம்பெறவில்லை.. வன்னியர்களின் வலி நியாயமானது என கூறியிருந்தார்.

சீமானின் இரட்டை நிலை
அதேபேட்டியில், தம்பி நடிகர் சூர்யா உதைப்பேன் என்று சொல்வதெல்லாம் அநாகரிகமானது. அப்படி பதிவிட்ட நபரை வேண்டுமானால் உதைங்க.. நான் காசு தருகிறேன் என்று எள்ளலாகவும் சீமான் கூறினார். மேலும் ஜெய்பீம் மிகச் சிறந்த திரைப்படம். அது வெற்றிகரமாக ஓடிவிட்டது. அதனால் பிரச்சனை முடிந்துவிட்டது எனவும் கூறியிருந்தார். அதாவது ஜெய்பீம் படக் குழுவுக்கு ஆதரவாகவும் வன்னியர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும் சீமான் கருத்து தெரிவித்திருந்தார்.

விவாதப் பொருள்
சீமானின் இந்த கருத்து இப்போது சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ளது. சீமான், இருதரப்புக்கும் இணக்கமாக பேசுவதை விமர்சிக்கிற குரல்கள் அதிகம் இருக்கின்றன. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு இப்போது சீமானுடன் மல்லுக்கட்ட தொடங்க உள்ளார்.

வன்னி அரசு கேள்வி
இது தொடர்பாக வன்னி அரசு பதிவிட்டதாவது: திரெளபதி,ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிச்சட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்? அரசபயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு படைப்பை சாதிரீதியாக முடக்க துடிக்கும் பாமகவோடு நிற்பது சரியாண்ணே? என கேள்வி எழுப்பியுள்ளார் வன்னி அரசு. வன்னி அரசுவின் இந்த பதிவின் மூலம் விசிகவினர் சீமானுக்கு எதிராக பொங்கி வருகின்றனர்.
Recommended Video

அன்று ஏன் மவுனம்?
அதாவது வன்னி அரசுவின் இந்த பதிவிலேயே, முத்திரைக்கே பொங்குறீரே சீமான். நாங்கள் மிகவும் பாசமும் மரியாதையும் கொண்டுள்ள எங்கள் தலைவரை சித்தரித்து பேசும் போது ஏன் மவுனம் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications