வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரர் வீட்டில் படுத்த படுக்கை! முதலமைச்சருக்கு வைகோ கடிதம்!
சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுதாரரான வீமராஜா, வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பதாகவும் அவருக்கு தியாகிகள் உதவித் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இதே போல் இந்த விவகாரத்தை துரை வைகோ மூலம் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனத்திற்கும் வைகோ கொண்டு சென்றிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைகோ எழுதிய கடிதம் வருமாறு;
''சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வாரிசுதாரர் திரு வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்கள் விபத்தில் காயம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தியாகிகள் உதவித் தொகை பெற்று வந்து கொண்டிருந்தார். நடக்க முடியாத சூழ்நிலையால் மார்ச் மாதம் ஊதியம் கூட இன்னும் பெறவில்லை என தெரிய வருகிறது.
எனவே, சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவருக்குச் சேர வேண்டிய தியாகிகள் உதவித் தொகையை அவரது வீட்டில் கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்திடுமாறும், அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.''
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுதாரர் வீமராஜாவுக்கு தியாகிகள் உதவித் தொகை கிடைத்திட முதல்வர் உடனடி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications