பதிவு சான்று.. தகுதி சான்று.. வாகன உரிமையாளர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு.. எழுந்த எதிர்ப்பு
சென்னை: புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை பெற கனரக வாகன உரிமையாளர்களே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கீகாரக் கடிதத்தின் அடிப்படையில் பதிவுச் சான்று, தகுதிச் சான்று வழங்கும் பழைய நடைமுறை தொடர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "கடந்த சில நாட்களாக புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை பெற கனரக வாகன உரிமையாளர்களே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இந்தச் சான்றிதழ்களை 2 நாட்களுக்குள் நேரில் பெற்றுச் செல்லவில்லையென்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தி.மு.க. அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.
ஓரிரு கனரக வாகனங்களை வைத்துக் கொண்டிருக்கும் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் டிரைவராக இருப்பதால் அவர்களால் தங்கள் தொழிலை ஒரு நாளைக்கு நிறுத்திவிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்வது சிரமமான காரியமாகும். மோட்டார் வாகனச் சட்டம் 470-ன்படி, அங்கீகாரக் கடிதத்தின் அடிப்படையில் பதிவுச் சான்று, தகுதிச் சான்று வழங்கும் பழைய நடைமுறை தொடர வேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதில் உடனடியாகத் தலையிட்டு, புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை அங்கீகாரக் கடிதத்தின் அடிப்படையில் வழங்கவும், புதிதாக பதிவுச் சான்றிதழ் பெறும் வாகனங்களுக்கு பி-ரெஜிஸ்டர் மூலம் அந்த வாகனத்திற்கான அனுமதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."இவ்வாறு கூறியுள்ளார்.
வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்: புதிய போக்குவரத்து வாகனங்கள் (சரக்குகள் மற்றும் பயணிகள்), தகுதி சான்றிதழ் (FC-Fitness Certificate) முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது . ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இந்த சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படும் . அதநேரம் 8 ஆண்டுகள் முடிந்த பின்னர், வாகனங்கள் வரி செலுத்திய பிறகு ஒவ்வொரு ஆண்டும் தகுதி சான்றிதழ் (FC-Fitness Certificate) புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.இதுதான் தற்போது தமிழநாட்டில் உள்ள நடைமுறையாகும்.
அதேநேரம் புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை பெற கனரக வாகன உரிமையாளர்களே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முன்பு அங்கீகாரக் கடிதத்தின் அடிப்படையில் பதிவுச் சான்று, தகுதிச் சான்றினை தருவார்கள். இப்போது வாகன உரிமையாளர்கள் நேரில் வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தான் எதிர்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications