சென்னையில் மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதமா? சென்னை டிராபிக் போலீஸ் விளக்கம்
சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக வேளச்சேரி, திநகர் உள்ளிட்ட மேம்பாலங்களில் முன்னெச்சரிக்கை காரணமாக வாகன ஓட்டிகள் தங்களது கார்களை பார்க்கிங் செய்தனர். மேம்பாலத்தின் இருபுறத்திலும் நிறுத்தி வைத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதற்கு போக்குவரத்து போலீசார் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னைவாசிகள் எளிதில் மறக்க முடியாத அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. சென்னை நகரம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் தனித்தீவு போல சென்னை மாறியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் அனைத்தும் வெள்ள நீர் புகுந்து பழுதானது.

இயல்பு நிலை திரும்புவதற்கு கிட்டதட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. சென்னையில் கடந்த ஆண்டை போல மழை வெள்ள பாதிப்பு ஏற்படாது எனவும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த ஆண்டு பருவமழை துவங்கும் முன்பே மிரட்டி வருகிறது.
சென்னைக்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடப்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் தங்களது கார்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தியதை பார்க்க முடிந்தது. கடந்த காலங்களில் மழைநீர் வெள்ளத்தினால் கார்கள் உள்பட பல உடைமைகளை இழந்ததால், இந்த முறை உஷரான வாகன ஓட்டிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் கொண்டுவந்து வாகனத்தை நிறுத்தினர்.
வேளச்சேரி விஜயநகர், பேபி நகர், டான்சி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தங்களது கார்களை வேளச்சேரி - பள்ளிக்கரணை இடையேயான மேம்பாலத்தின் இருபுறத்திலும் நிறுத்தி வைத்தனர். இதனால் மேம்பாலத்தின் மீது கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. இதனால், போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததாகவும் தகவல் வெளியானது.
அதேபோல, வாகன உரிமையாளர்களுக்கு போன் செய்து காரை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. பள்ளிக்கரணையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைத்து உள்ளதாக கூறி பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் அபராத 'செலான்'களை காரின் கண்ணாடிகளில் வைத்தனர். கார்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் பரவாயில்லை மழையில் மூழ்கினால் பல ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது என்று வாகன ஓட்டிகள் ஆதங்கமும் தெரிவித்தனர்.
வேளச்சேரி மட்டும் இன்றி மாதவரம், கோயம்பேடு, திநகர் உள்ளிட்ட பகுதிகளிள் உள்ள மேம்பாலங்களிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேம்பாலங்களில் நிறுத்தப்படும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அது போல எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போக்குவரத்து காவலர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என கடுமையான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான பார்க்கிங் இடம் குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறை மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்..
சென்னை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள்:
* தெற்கு மற்றும் கிழக்கு: 044 23452362
* வடக்கு மற்றும் மேற்கு: 044-23452330












Click it and Unblock the Notifications