ரயில்வேயின் கனவுத் திட்டம்.. தென் சென்னைக்கு தெற்கு ரயில்வே தந்த மிகப்பெரிய குட்நியூஸ்.. ரெடியாகுங்க
சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைக்கும் பணி அக்டோபரில் நிறைவடையும் என்றும், அதன்பிறகு வேளச்சேரிக்கு வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் சேவை அளிக்கப்படும் என்றும் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார். இந்த 4வது பாதை ரெடியானால் தாம்பரம் முனையத்திலிருந்து வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.
சென்னையில் முக்கிய ரயில் வழித்தடமான கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில், எழும்பூர் முதல் தாம்பரம் வரை நான்கு பாதைகளும், அதன்பிறகு எழும்பூர் முதல் கடற்கரை வரை 3 ரயில் பாதைகளும் இருக்கின்றன இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர பீக் ஹவர்ஸில் அதிவேக மின்சார ரயில்கள் 3வது பாதையில் இயக்கப்படும்.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓரளவுக்கு மேல் வடமாநில ரயில்களை இயக்க முடியாத நிலை இருக்கிறது. இதையடுத்து பாதி ரயில்களை தாம்பரம் முனையத்திலிருந்து வடமாநிலங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வட மாநிலங்களுக்கு புதிதாக அறிவிக்கப்படும் ரயில்களை இயக்குவதற்கும், பீக் ஹவர்ஸில் மின்சார ரயில்களை அதிகரிக்கவும் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை முக்கியமானதாகும். மேலும் சரக்கு ரயில்கள் அதிக அளவில் தாம்பரம் மற்றும் எழும்பூர் முனையத்திற்கு செல்ல இந்த பாதை அவசியமாகும்.
தற்போது தாம்பரத்தை 3வது முறையாக மாற்றும் பணி 1000 கோடியில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து செயல்பாட்டிற்கு தயாராகுவதற்கு முன்பே சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4வது பாதையை அமைக்க தெற்கு ரயில்வே விரும்பியது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
இதையடுத்து சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.279.8 கோடியில் 4-வது புதிய பாதை அமைக்க மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து சென்னை கடற்கரையில் இருந்து வேளாச்சேரி செல்லும் ரயில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து சிந்தாதிரிபேட்டை வரை சேவை நிறுத்தப்பட்டது. இதனால் வேளாச்சேரி செல்லும் அனைத்து ரயில்களும் சிந்தாதிரிபேட்டையில் இருந்து புறப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி பணிகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருககிறது.
இந்தநிலையில், 4-வது ரயில் பாதை அமைக்கும் பணிக்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நிலத்தில், 250 சதுர மீட்டர் நிலம் ரிசர்வ் வங்கிக்கும், 2 ஆயிரத்து 875 சதுர மீட்டர் பரப்பளவிலான இடம் கூவம் ஆறு (கூவம் ஆற்றின் கரையோர பகுதி) பகுதி மாநில அரசுக்கும் சொந்தமானதாகும். இதை வாங்குவதற்கு தமிழக அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் ரயில்வே அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில், 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான இடம் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் வருவதால் தயக்கம் ஏற்பட்டது. அத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பெரிய அளவில் ரயில்வே அதிகாரிகள் பல முறை பேசிய பின்னர் மத்திய அரசு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதனால் தான் திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கூறுகையில், 'சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே நடந்து வரும் 4-வது வழிப்பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து வழக்கம் போல் கடற்கரையில் இருந்து வேளாச்சேரி உள்பட அனைத்து ரயில்களும் இயக்கப்படும். பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்னையின் 4-வது ரயில் முனையமாக மாற்றும் நடவடிக்கைக்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications