17 வருட காத்திருப்பு முடிகிறது.. வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை.. டிசம்பரில் குட்நியூஸ்
சென்னை: ரூ.730 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் வழித்தடத்தில் தண்டவாள அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன, மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, வேளச்சேரிக்கும் பரங்கிமலை இடையே மவுண்டுக்கும் இடையிலான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் வழித்தடம் இறுதியாக டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் மிக முக்கியமான புறநகர் மின்சார ரயில் வழித்தங்களில் ஒன்று சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் வழித்தம்.இந்த வழித்தடம் பறக்கும் ரயில் வழித்தடம் ஆகும். சென்டரலில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் வழித்தடமாக இருக்கிறது.

வேளச்சேரி வரை ரயில் நிலையங்கள்
சென்டரலில் உள்ள பூங்கா ரயில் நிலையத்தில் ஏறும் மேம்பாலம், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, லைட் ஹைவுஸ், முண்டகக்கன்னியம்மன் கோவில், திருமயிலை, மந்தைவெளி, பசுமைவெளிச்சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரி பாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் முடிகிறது. வேளச்சேரியில் தான் தரையில் ரயில் நிலையம் வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 100 சர்வீஸ்களான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.
நிலம் பிரச்சனை
இதனிடையே வேளச்சேரி - பரங்கிமலை 5 கி.மீ., துாரம் இணைக்கும் வகையில், மேம்பால ரயில் பாதை பணிகள், 2008ம் ஆண்டில் துவங்கின. ஆரம்பத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பணிகள் முழுமை அடையாமல், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைக்கு 2022ம் ஆண்டு தான் தீர்வு கிடைத்தது.
பறக்கும் ரயில் பணிகள்
உச்ச நீதிமன்றம் வரை சென்ற பின்னரே நிரந்தமாக பிரச்சனை முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் பணிகள் நடந்தன. கிடப்பில் இருந்த ஆதம்பாக்கம் - பரங்கிமலை ரயில் இணைப்பு மேம்பால பணிகள் முடிந்தன. அடுத்தகட்டமாக, ரயில் பாதை, சிக்னல் அமைக்கும் பணிகளும், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ரயில் நிலைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. எனவே எப்போது ரயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ரயில்வே அதிகாரி பேட்டி
இதுபற்றி தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. ரயில் டிஸ்ட்ரெஸ்ஸிங் பணி நடந்து வருகிறது என்றார். ரயில் டிஸ்ட்ரெஸ்ஸிங் என்பது, தண்டவாளங்களை இணைக்கும்போது, அவற்றைத் துண்டுகளாக இல்லாமல், நீண்ட தொடர்ச்சியான கம்பி போலப் பற்றவைப்பார்கள்.
ரயில் டிஸ்ட்ரெஸ்ஸிங்
ஏனெனில் கடுமையான வெயில் காலத்தில் இந்தக் கம்பி நீண்டு விரிவடையும். அப்போது, அது வளைந்து போகவோ , உடைந்து போகவோ வாய்ப்புள்ளது. எனவே வெயில் அதிகம் இல்லாத ஒரு குறிப்பிட்ட (ஆதர்சமான) வெப்பநிலையில், ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தைப் பிடித்து இழுத்து அல்லது வளைத்து, அதில் இருக்கும் உள்ளமைந்த அழுத்தத்தை நீக்குவார்கள். இதனால், கோடை காலத்தில் தண்டவாளம் எவ்வளவு விரிவடைந்தாலும், அது வளைந்து போகாமல் அல்லது விபத்துக்களை ஏற்படுத்தாமல் பயணிக்கப் பாதுகாப்பானதாக இருக்கும்.
இயந்திரப் பொதிவு
அடுத்தததாக இயந்திரப் பொதிவு மற்றும் சுமை விலகல் சோதனையை பறக்கும் ரயில் வழித்தடத்தில் செய்வார்கள். இயந்திர பொதிவு சோதனை என்பது தண்டவாளங்களின் கீழ் இருக்கும் சரளைக்கற்கள் சரியான கோணத்தில், தேவையான அழுத்தத்துடன் இருக்கிறதா என்பதை ஒரு பெரிய இயந்திரம் மூலம் அழுத்திச் சரிசெய்வது. தண்டவாளத்தின் அசைவுகளைக் குறைத்து, பாதையை சமன்படுத்தும் வேலையாகும்.
சுமை விலகல் சோதனை
அடுத்ததாக சுமை விலகல் சோதனை என்பது, தண்டவாளத்தின் மீது ரயில் ஓடும்போது அதன் எடைக்கு ஏற்ப எவ்வளவு வளைகிறது என்று சோதிப்பது ஆகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், தண்டவாளம் வளையும் தன்மை மற்றும் உறுதித்தன்மையைச் சரிபார்ப்பார்கள். அத்துடன் ரயிலை ஓட்டுவதற்குத் தேவையான மின்சாரக் கம்பிகளைத் தண்டவாளத்திற்கு மேலே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளுக்கு மின்சாரம் வழங்கும் பணியை முடிப்பார்கள் .
டிசம்பரில் ஓடும்
இந்த மூன்று பணிகளையும் முடித்து பறக்கும் ரயில் பாதையை டிசம்பர் மாதம் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள். பறக்கும் ரயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால், பரங்கிமலை ரயில் நிலையம் அதாவது மௌண்ட் ரயில் நிலையம், தாம்பரம் போல் மிக மிக முக்கியமான ரயில் நிலையம் ஆக உருவெடுக்கும்.












Click it and Unblock the Notifications