வேலூரே வெயிட்டிங்.. நெருங்குது கிறிஸ்துமஸ் பண்டிகை.. கே.வி.குப்பம் சந்தையில் காத்திருக்கும் "ஆடுகள்"
சென்னை: விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி காத்திருப்பதாக, வேலூர் மாவட்ட கால்நடை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். என்ன காரணம்?
கிறிஸ்துமஸ் என்றாலே, கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் குடிலுக்கு தேவையான பொம்மைகள் மற்றும் பொருட்களின் விலைகள் பட்டையை கிளப்பும்..

அதுபோலவே, இறைச்சியின் விலையும் சந்தைகளில் கூடிவிடும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாகவே, கொரோனா பாதிப்பால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தமிழக மாவட்டங்களில் இயல்பாக இல்லை.
தொற்று பாதிப்பு: கடந்த வருடம் ஓரளவு தொற்று பாதிப்பு குறைந்தாலும், கிறிஸ்துமஸ் வியாபாரம் பெரிய அளவுக்கு சூடுபிடிக்கவில்லை. எனவே, இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை, ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள் தமிழகத்தின் கால்நடை வியாபாரிகள்.. அந்தவகையில், இந்த வருட கிறிஸ்துமஸை பெருமளவு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் வேலூர் மாவட்ட வியாபாரிகள்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று இங்கு நடக்கும் ஆட்டு சந்தையானது, முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது..
சிறப்பு சந்தை: காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.. அதேபோல, பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களிலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
ஆனால், சென்ற தீபாவளி பண்டிகையின்போது, குறைந்த அளவிலான ஆடுகளே இங்கு கொண்டுவரப்பட்டன. விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல், வியாபாரிகள் அவைகளை தங்கள் வீடுகளுக்கு திருப்பி எடுத்துச் சென்றார்கள்.. நேற்றுகூட, வாரச்சந்தை நடைபெற்றது.
பெருகும் எதிர்பார்ப்பு: தற்போது, மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவிவந்தாலும்கூட, அதனை பொருட்படுத்தாமல் கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் இருந்தும், குடியாத்தம், காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர்.. அவைகளை 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகளை விலை பேசி பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
வழக்கமாக 7 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சந்தை நிலவரம் இருந்து வந்த நிலையில், தற்போது ஆடுகளின் விலை குறைவாக இருந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
எதிர்பார்ப்பு: விற்பனை சுமாராக நடந்தாலும், ஆடுகள் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகவில்லை என்ற வருத்தம் வியாபாரிகளுக்கு உள்ளதாம். அதனால், விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் வருவதால், ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையாகும் என்று நம்புவதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications