ஜார்கண்டிலிருந்து 860 பெண்களை பணிக்கு அழைத்துவந்த டாடா! தமிழக பெண்களுக்கு திறமையில்லையா?-வேல்முருகன்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்திற்கு ஜார்க்கண்டிலிருந்து 860 பெண் தொழிலாளர்கள் தனி ரயில் மூலம் அழைத்து வரப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வடமாநிலப் பெண்களை பணியமர்த்திய டாடா நிறுவனத்தின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பெண்களுக்கு பணி வழங்க, டாடா நிர்வாகம் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;
சதிகார கும்பல்களின் சதி திட்டங்களை தவிடு பொடியாக்கியவர் ஸ்டாலின்! வாழ்த்தி வணங்கும் வேல்முருகன்!
டாடா எலக்ட்ரானிக்
கிருஷ்ணகிரி மாவட்டம் கூத்தனப்பாலை டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலைக்காக தனி தொடர் வண்டியில் ஜார்க்கண்ட்டிலிருந்து 860 பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களை வேலையில் அமர்த்துவதிலிருந்து தவிர்ப்பதற்காகவே - வெறும் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்த பெண்கள் மட்டுமே தங்களுக்கு வேண்டுமென டாடா நிறுவனத்தினர் வடமாநில பெண்களை பணி அமர்த்தியுள்ளனர்.
ஜார்கண்ட் பெண்கள்
டாடா வெளிப்படையாகவே, 18 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள இளம்பெண்களே வேண்டும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் படித்திருக்கக் கூடாது என்றும் நிறுவனத்தினர் வேலைக்கு வடமாநில பெண்களை நியமித்திருப்பது சட்டப்படி தவறானதாகும். தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் படித்துவிட்டு உரியப் படிப்புக்கேற்ற வேலையின்றி தவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலேயே செயல்படும் டாடா தனியார் நிறுவனம், தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு இளம் பெண்களை சிறப்புத் தொடர்வண்டி வழியே அழைத்து வந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக இளம் பெண்கள்
சட்டவிரோத அறிவிப்பின் வழியே வடமாநிலப் பெண்களை பணியமர்த்திய டாடா நிறுவனத்தின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே, தனது நிறுவனத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த இளம் பெண்களுக்கு பணி வழங்க, டாடா நிர்வாகம் முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.
மண்ணின் மக்களுக்கு வேலை
மேலும், தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு, மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை வழங்க, அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்த வேண்டும். இதற்காக, அரசு தரப்பில் இருந்து, தனியார் நிறுவனங்களை கண்காணிக்க, தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.