முதல்வர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும்... பொங்கியெழும் வேல்முருகன்..!
சென்னை: உத்திரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது அரங்கேறிய தாக்குதலுக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது அரங்கேற்றிய தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவான 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத மோடி அரசு, விவசாயிகளின் போராட்டத்தை அடக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இந்த ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு, அவர்கள் மீது கார் ஏற்றி கொலை செய்துள்ளது மோடி அரசும், யோகி ஆதித்யநாத் அரசும்.
அதாவது, உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3.10.2021 அன்று, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, அவரது மகன் அஷிஸ் மிஸ்ரா, துணை முதல்வர் கேசவ் மரியா பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா வரும் வழியில், திரண்ட விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டும் அறப்போரில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, கூட்டத்திற்குள் ஒன்றிய அமைச்சரின் பின்னால் வந்த அவரது மகனின் கார் தாறுமாறாக புகுந்தது. அந்த வாகனம் ஏறி இறங்கியதில் விவசாயிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 விவசாயிகள் உயிர் துறந்துள்ளனர்.
இந்த காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து வாய் திறக்காத மோடி அரசும், யோகி ஆதித்யநாத் அரசும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகி லேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்துள்ளது. மோடி, யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய அராஜக போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
எனவே, விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். தாக்குதலுக்கு காரணமான, மத்திய இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், அக்கும்பலை கைது செய்ய உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து, மக்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications