சுதர்சனம் கொலை வழக்கு! குற்றவாளியாக அறிவித்த 3 பவாரியா கொள்ளையர்களுக்கு என்ன தண்டனை? நாளை அறிவிப்பு!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான தண்டனை விவரங்களை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் நாளை (நவ.24) அறிவிக்கிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த சுதர்சனத்தின் வீட்டு கதவை யாரோ தட்டினர். உடனே மாடியில் இருந்த சுதர்சனம் கீழே இறங்கிய போது முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்களை பார்த்து சப்தமிட்டார்.
இதையடுத்து பவாரியா கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அவரது வீட்டில் இருந்த 62 பவுன் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் தேடப்பட்டனர்.
அந்த வகையில் ராஜஸ்தான், ஹரியானாவை சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். கைதான 9 பேரில் 3 பேர் ஜாமீனில் வெளியாகி தலைமறைவாகிவிட்டனர். 2 பேர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டனர்.
தற்போது சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜாமீன் பெற்ற ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து பவாரியா கும்பலைச் சேர்ந்த ஜெகதீஷ், அசோக், ராகேஷ் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது.
இவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அந்த வகையில் அந்த 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications