முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர் ஆர்.நாகசாமி காலமானார்.. பிரதமர் மோடி தமிழில் இரங்கல்!
சென்னை: முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. ஆர்.நாகசாமி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞரான ஆர்.நாகசாமி தமிழக அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநரும் ஆவார். 1930-ம் ஆண்டு பிறந்த இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் மொழியியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்.
ஷாக்! தனது நிலத்தில் விளையாடிய குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பாஜக அமைச்சரின் மகன்
முதுபெரும் தொல்லியல் ஆய்வாளர்
கடந்த 1963-ம் ஆண்டு முதல் 1965-ம் ஆண்டு வரை தமிழக அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், 1966-ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்தார். ஓய்வு பெற்ற பிறகு பகல்வெட்டு இயக்கத்துக்கு தலைமை தாங்கிய ஆர்.நாகசாமி தொல்லியல் துறையில் மத்திய அரசுக்கு ஆலோசகராக இருந்தார்.
பத்மபூஷண் விருது பெற்றவர்
கல்வெட்டு, தமிழ்வரலாறு குறித்து தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான நூல்களையும் எழுதி உள்ளார். ஆர்.நாகசாமியின் பணிகளைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.முதுபெரும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழில் இரங்கல்
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ' தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் திரு.ஆர்.நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள். வரலாறு & தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைகிறேன்.அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி' என்று கூறியுள்ளார்.
அரிய நூல்களைப் படைத்தவர்
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' கல்வெட்டு, கலை, இலக்கியம், வரலாறு துறைகளில் அரிய நூல்களைப் படைத்தவர்.முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளரும், தமிழக அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநருமான ஆர்.நாகசாமி அவர்கள் மறைவு பேரிழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி' என்று தெரிவித்துள்ளார்.