முடங்கிய லஞ்ச ஒழிப்பு பிரிவு.! அரசு ஊழியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறைந்தது
சென்னை: தமிழகத்தில் லஞ்சத்தில் திளைக்கும் அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுப்பது 77 சதவீதம் குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு 800 பேர் லஞ்ச விவகாரத்தில் சிக்கிய நிலையில், 2018-ம் ஆண்டில் 515 பேர் மட்டுமே லஞ்சம் வாங்கிய புகாரில் பிடிபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டதிருத்தமே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

லஞ்ச ஊழலில் திளைக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வரும் முறைகேடு புகார்களின் பேரில், உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதே இப்பிரிவின் முக்கிய பணி.
அதன்படி 2017-ம் ஆண்டு 800 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது. ஆனால் 2018-ம் ஆண்டு 518-ஆக குறைந்துவிட்டது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 77 சதவீதம் குறைவாகும். தமிழக அரசின் நிர்வாகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை தான் கடந்த மூன்று ஆண்டுகளாக லஞ்சத்தில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இத்துறையை சேர்ந்த 260 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து வருவாய்த்துறையில் 146 பேரும் காவல்துறையில், 94 பேரும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.
முன்பெல்லாம் லஞ்ச ஊழல் புகாரில் விஜிலென்ஸ் அதிகாரிகளே நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் அதிரடியாக நுழைந்து விசாரணை, வழக்குப்பதிவு, பொறி வைத்து பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது.
ஆனால் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் இதற்கெலல்லாம் முட்டுகட்டை போட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர். எந்த துறை ஊழியர் லஞ்ச புகாரில் சிக்கினாலும், அத்துறையினுடைய தலைவர் அல்லது உயரதிகாரியின் அனுமதி பெற்ற பின்னர் தான் விசாரணையை துவக்க வேண்டும் என சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் ஊழலை எதிர்க்க கூடியவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்களானாலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் குறிப்பிட்ட அரசு துறையின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை, அவர்களின் கவனத்திற்கே கொண்டு சென்ற பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, திருடன் கையிலேயே சாவி கொடுப்பது போல உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பொய் புகாரில் நேர்மையான அதிகாரிகளுக்கு இழுக்கு ஏற்படுவதை, இந்த சட்டத்திருத்தம் தடுக்கிறது. இருப்பினும் இச்சட்டத்திருத்தத்தின் ஓட்டைக்குள் புகுந்து தப்ப, ஊழல்வாதிகளை அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
ஊழல் செய்கிறார் அல்லது லஞ்சம் வாங்குகிறார் என ஒரு ஊழியர் மீது குற்றம்சாட்டப்பட்டால், விரைந்து சென்று பிடித்தால் தானே கையும களவுமாக சிக்குவார். அதை விட்டு குற்றம்சாட்டப்பட்டவரின் மேலதிகாரியிடம் அனுமதி பெற்ற பிறகு தான் விசாரிக்கவே வேண்டும் என கூறுவது, தவறு செய்தவர் ஆதாரங்களை அழித்து விட்டு எளிதாக தப்ப அரசே வழிவகுத்து கொடுப்பது போல் உள்ளது என சாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications