"விஜய்யும், சீமானும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - திருமாவளவன் சரமாரி தாக்கு!
மதுரை: "விஜய்யும், சீமானும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. ஒருவர் திமுகவை வீழ்த்தவே கட்சி தொடங்கியிருக்கிறார். மற்றொருவர் தமிழ் தேசியம் என்ற பெயரில் இந்து தேசியமும், பிராமண தேசியமும் பேசுகிறார்." எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயல்வதாக பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக உரையாற்றிய திருமாவளவன், "திருப்பரங்குன்றத்தைப் பற்றிப் பேச இந்த மண்ணின் மைந்தன் என்ற தகுதி எனக்குப் போதும். நான் முருகனைத் தரிசித்துவிட்டு வரும்போது பூசிய திருநீற்றை வைத்து அரசியல் செய்தார்கள். நான் பூசியது அவர்களுக்குப் பிரச்சனை இல்லை, அதை அழித்ததுதான் அவர்களுக்குப் பிரச்சனை.
விபூதி பூசுவது அந்த இடத்திற்கான மரபு, அதனை நான் மதிக்கிறேன். ஆனால், அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் இந்துக்களின் உண்மையான துரோகிகள். அவர்கள் கட்டமைக்க விரும்புவது இந்து ராஷ்டிரம் அல்ல, பார்ப்பன ராஷ்டிரம். தமிழ் கடவுள் முருகனைச் சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றிப் பார்ப்பனர்களுக்குத் தொண்டு செய்பவனாகச் சித்தரிக்கிறார்கள். முருகன் என்ற பெயரைச் சொல்லவே எச்.ராஜாவுக்கு தகுதியில்லை.
இந்தியாவில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கொடுமைகளுக்காக என்றாவது ஒரு நாள் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பை சார்ந்தவர்கள் போராடிய சான்று இருக்கிறதா? உயர்கல்வியில் இன்று இந்துக்கள் எத்தனை பேர் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த அளவிற்கு பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் வளர்ச்சி அடைந்துள்ளனரா?
ஆர்எஸ்எஸ், பாஜகவினர்,பெரும்பான்மை வாதம் பேசி ஆட்சியை தக்க வைத்து ஒட்டுமொத்த தேசத்தையும் முதலாளிகளுக்கு கார்ப்பரேட் மயமாக்கிவிட்டு இந்துக்களை ஓட்டாண்டிகளாக்கி வெளியே நிறுத்துவது தான் ஆர்எஸ்எஸ் கும்பலின் சதி திட்டம். ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு துணைபோகின்ற ஒவ்வொருவரும் இந்து மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் விளைவிக்கிறார்கள் என்று தான் பொருள்.
தமிழ்நாட்டு மக்கள் இருவரை அடையாளம் கண்டு விட்டார்கள். ஒருவர் விஜய், இன்னொருவர் சீமான். சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது இன்று அம்பலமாகிவிட்டது. ஒருவர் திமுகவை வீழ்த்தவே கட்சி தொடங்கி இருக்கிறார், மற்றொருவர் பிராமண கடப்பாரை கொண்டு பெரியாரை இடிப்பேன் என்கிறார். திமுக ஒரு தீய சக்தி என்பதுதான் விஜய்யின் ஒரே நோக்கம் என்றால், நீங்கள் தமிழக மக்களுக்காகக் கட்சி தொடங்கவில்லை, ஆர்எஸ்எஸ்-க்காகத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அரசியல் அறியாமையில் விஜய் எதையோ பேசுகிறார்.
திருமாவளவனுக்குப் பதவி ஆசை இருந்திருந்தால் விஜய்யின் பின்னால் போயிருப்பேன். எங்களுக்குச் சீட் முக்கியமில்லை, கொள்கைதான் முக்கியம். பாமகவின் ஒரு பிரிவு திமுக கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். சனாதனத்தை எதிர்க்கவே நாங்கள் திமுகவுடன் நிற்கிறோம். நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக திட்டமிட்டு வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது. பாபர் மசூடி இடிக்கப்பட்டதும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதும், பைபிள்கள் கொளுத்தப்படுவதும் அதன் விளைவுகள்தான். இந்தியா முழுவதும் 175 மசூதி மற்றும் தர்காக்களை இடிக்கச் சங்பரிவார் கும்பல் திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம்.
அப்படி வெறுப்பை விதைக்கிறபோது அதை நாம் எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்? இந்தியாவிலேயே தனித்துவத்தோடு இயங்கும் மாநிலம் தமிழ்நாடு. பீகார், உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஜம்பம் பலிக்கலாம். தமிழ்நாட்டில் பாஜகவின் ஜம்பம் பலிக்காது." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications