இளைஞர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன.. திருத்தணி விவகாரம்! தமிழக அரசு மீது விஜய் அட்டாக்
சென்னை: திருத்தணி இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விஜய் ட்வீட் பதிவிட்டுள்ளார். இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடு கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியமே இச்சம்பவத்துக்கு காரணம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை எனவும் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை எனவும், எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை கேட்டுக்கொள்வதாக விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக விஜய் கூறியிருப்பதாவது:-

திருத்தணியில் வட மாநில இளைஞருக்கு கொடூரம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி அருகே ஒடிசாவை சேர்ந்த இளைஞர் சுராஜ் என்பவர் சுற்றுலாவிற்காக வந்திருக்கிறார். அப்போது மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்த போது சிறுவர்கள் சிலர் அவரிடம் தகாறில் ஈடுபட்டுள்ளனர். ரயிலில் வைத்தே அவரை கத்தியால் காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்துள்ளனர்.
இதில் சுராஜ் சிறுவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவர்கள் சுராஜை ரயிலில் இருந்து கீழே இறக்கி தனி இடத்தில் வைத்து தாக்கியுள்ளனர். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் வலியால் கதறி துடித்தும் சிறுவர்கள் விடாமல் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒருவர் சுராஜ் தலையில் கத்தியால் கொத்தியதாக தெரிகிறது. இதனால் தலையில் இருந்து ரத்தம் சொட்டியது. மற்றொருவர் தலையில் ஓப்பன் ஆகிவிட்டது விடுடா.. என சொல்ல பட்டாக் கத்தியை வைத்திருக்கும் சிறுவன் மீண்டும் மீண்டும் தாக்குவது போல் வீடியோ பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவெக விஜய் கண்டனம்
இந்த சம்பவத்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விஜய்யும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசை விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். விஜய் கூறியிருப்பதாவது:-
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை.
யாருக்காக ஆட்சி நடத்துகிறீர்கள்
இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை.
புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications