தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!
சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து விலகி வரும் நாதகவினரை தவெகவில் இணைக்க முதல்வர் விஜய் சிக்னல் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாதக வலிமையாக இருக்கிறது. இதனால் அவர்களை தங்கள் பக்கம் கொண்டு வர விஜய் முடிவு செய்துள்ளார். இதனால் நாதகவினர் சாரை சாரையாக தவெகவில் இணைந்து வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் எழுச்சியால் அதிக பாதிப்பை சந்தித்திருப்பது நாதக தான். ஏனென்றால் 8.1% வாக்குகள் வைத்திருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி தற்போது 3.9%ஆக குறைந்துள்ளது. தவெக இன்னும் இரு சட்டசபைத் தேர்தலுக்கு வலுவாக இயங்கக் கூடிய கட்சியாக பார்க்கப்படுவதால், நாதக நிர்வாகிகள் விரக்தியில் இருக்கின்றனர். இதனால் தவெக பக்கம் தாவும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே தங்களின் அரசியல் பலத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் பணிகளில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென் மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்க தவெக தலைமை ஒரு மாபெரும் வியூகத்தை வகுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியிலிருந்து பல்வேறு காரணங்களால் விலகி, அரசியல் ரீதியாக ஒதுங்கியிருக்கும் முக்கிய நிர்வாகிகளைத் தவெகவில் இணைத்துக் கொள்ள அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பச்சைக்கொடி காட்டியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தல்களில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாதக கணிசமான வாக்குகளைப் பெற்றது.
தென் மாவட்டங்களில் தவெகவை அடித்தட்டு மக்களிடமும், இளைஞர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால், அங்கு ஏற்கனவே களப்பணியில் தீவிரமாக இருக்கும் நாதகவினரைத் தங்கள் பக்கம் கொண்டு வருவதுதான் சரியான வியூகம் என முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் வெல்வதற்கு மக்களுக்கு பரீட்சையமான முகங்கள் அவசியம்.
இதனை கணக்கில் கொண்டு விஜய் சிக்னல் கிடைத்ததை தொடர்ந்து, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாதக முக்கியப் பொறுப்பாளர்கள், வட்டார நிர்வாகிகள் மற்றும் தீவிர களப்பணியாளர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணையத் தொடங்கியுள்ளனர். நாதகவில் இருக்கும் பெரும்பாலானோர் தீவிர அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் என்பதால், அவர்களை கொண்டு வருவது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என தவெக மாவட்டச் செயலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆட்சி அமைத்த வேகத்தில், எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியைத் தன்பக்கம் இழுக்கும் முதல்வர் விஜய்யின் இந்த அரசியல் நகர்வு, தென் மாவட்ட அரசியல் களத்தில் நாதகவுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இந்த நிர்வாகிகளின் இடமாற்றம் தென் மாவட்ட அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications